மீனாட்சி அம்மன் கோவில் - கள்ளிக்குடியில் ரூபாய் 2.71 கோடியில் தீயணைப்பு நிலையங்கள் ; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளியில் தொடங்கி வைத்தார்.

Published Date: October 7, 2024

CATEGORY: CONSTITUENCY

மீனாட்சி அம்மன் கோவில் கள்ளிக்குடியில் ரூபாய் 2.71 கோடியில் தீயணைப்பு நிலையங்கள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளியில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7-ந்தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக மதுரை மாவட்டத்தில் ரூபாய் 2 கோடியே 71 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

மதுரையில் விழா:

இதைத்தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் புதிதாக திறந்து வைக்கப்பட்ட மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் ரூபாய் 117.05 லட்சம் மதிப்பீட்டில் 3,217 சதுர அடி பரப்பளவிலும் கள்ளிக்குடி தீயணைப்பு நிலையம் ரூபாய் 154.92 லட்சம் மதிப்பீட்டில்  2,614 சதுர அடி பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி (மதுரை வடக்கு), மு. பூமிநாதன் (மதுரை  தெற்கு), மாநகராட்சி மண்டல தலைவர் பாண்டிச் செல்வி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மதுரை மண்டல துணை இயக்குனர் ந.விஜயகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜேம்ஸ் தாஸ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Media: Malaimalar