மதுரையை உலுக்கிய சோக சம்பவம் : ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர் பிடிஆர் - நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!

Published Date: September 12, 2024

CATEGORY: EVENTS & CONFERENCES

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தெருவில் விசாகா என்ற பெயரில் பெண்கள் விடுதி செயல்பட்டு வந்தது. பணிக்கு செல்லும் மகளிரும், கல்லூரி மாணவிகளும் இங்கு தங்கியிருந்தனர். விடுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பழைய ஃப்ரிட்ஜ் ஒன்று திடீரென வெடித்ததால் தீ ஏற்பட்டு அங்கு கரும்புகை சூழ்ந்தது. இதனையடுத்து, உடனடியாக அங்கு தங்கி இருந்த பெண்கள் வெளியேறினர்.

2 பெண்கள் உயிரிழப்பு:

அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் சிலர் புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பள்ளி ஆசிரியைகள் இருவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பி.டி.ஆர். நேரில் ஆய்வு:

விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தகவலறிந்த ஐடி துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேரடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

பி.டி.ஆர்.பேட்டி:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.ஆர், “தமிழகம் முழுவதும் விடுதிகளில் குளறுபடிகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை. விடுதியில் தங்கியிருந்த பெண்களுக்கு மாற்று விடுதியில் தற்காலிகமாக தங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நானே முன்வந்து என்ன உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

தலைமைச் செயலாளருடன் பேசி நடவடிக்கை:

தொடர்ந்து, “இதுபோன்ற சம்பவம் எப்படி நடந்தது, என்னென்ன விதிமுறை மீறல்கள் இருந்தன, அவற்றை எவ்வாறு சரி செய்திருக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும். விதிமுறை மீறல்களை சரிசெய்வது தொடர்பாக தலைமைச் செயலாளருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.

விடுதிகளுக்கு புதிய விதிகள்:

மேலும், “இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு விடுதிகளை நடத்துவது தொடர்பாக விதிமுறைகள் கொண்டு வரப்படும். விடுதி இருந்த கட்டிடத்தை இடிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாக எனக்கு தகவல் வந்தது. அரை குறை தகவலை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. முழுத் தகவலும் வந்த பிறகு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் உறுதியளித்தார்.

Media: TAMIL.SAMAYAM.COM