முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published Date: October 21, 2022

CATEGORY: EVENTS & CONFERENCES

சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களைத் தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகளை முதலமைச்சர்         மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (20. 10. 2022) தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களைத் தொடங்கி வைத்து மையங்களுக்கான நவீன மேசை கணினிகள் வழங்கிடும் அடையாளமாக 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நவீன மேசை கணினிகள், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லையும் வழங்கினார்.

கொளத்தூர் தொகுதி அலுவலகத்திற்கு முதல்வர் வழங்கித் தொடங்கி வைத்தார்!

அதனைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தைத் தொடங்கிடும் வகையில் முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான          மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நவீன மேசை கணினி, பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அரசு இ-சேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராமப்புற வறுமை ஒழிப்புக்குழுக்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மற்றும் கண்ட்ரோன்மெண்ட் போர்டு மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்தின் அருகாமையிலேயே வழங்குகின்றன. இதனை மேம்படுத்தும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்களைத் தொடங்கி மக்கள் இணைய வழி சேவைகளைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன.

எம்.எல்.ஏ.க்களுக்கு மேசை கணினிகள்!

தமிழ்நாடு அரசால் கடந்த ஆண்டு முதன்முறையாக காகிதமில்லா சட்டமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. அதற்கென சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நவீன மேசை கணினிகள் வழங்கப்பட்டன சட்டமன்ற பேரவை செயலாளர் துறை சார்பாக மாநிலத்தின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் இ சேவை மையங்கள் அமைப்பதற்காக அதிநவீன மேசைக் கணினிகள் வழங்கப்படுகின்றன

இக்கணிணிகளைப் பயன்படுத்தி இ-சேவை வலைத்தளத்திலிருந்து(tnesevai.tn.gov.in/Default.aspx) இணையவழி சேவைகளை மக்களுக்கு வழங்க 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகளை வழங்கிடும் அடையாளமாக சட்டப்பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை, ஜி.கே.மணி, ம.சிந்தனைசெல்வன், டாக்டர்.தி.சதன்திருமலைக்குமார்,     எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ..ஆர்.ஈஸ்வரன், தி.வேல்முருகன் ஆகியோருக்கு மேசை கணினிகளையும், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் நீரஜ் மிட்டல், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமைச் செயல்அலுவலர் பிரவீன் பி. நாயர், சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Media: Murasoli