மதுரையில் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா! ரூ. 57 லட்சம் மதிப்பில் கடனுதவி!

Published Date: November 20, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, நவ.20- மதுரை மடீசியா கூட்டரங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பாக நடைபெற்ற 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பாக பயனாளிகளுக்கு ரூ.56,49,199 மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கி சிறப்பாகச் செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கேடயங்கள் வழங்கி  பாராட்டினார்.

மேலும் விழாவில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-   

கூட்டுறவுத்துறை என்பது பொருளாதாரத்தில் பின் தங்கிய சாமானிய மக்களின் வளர்ச்சிக்காக, இலாப நோக்கமில்லாமல் செயல்படும் முக்கியத் துறையாக விளங்குகின்றது.  கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக பொதுமக்களுக்கு பல்வேறு கடனுதவி வழங்கல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள்  வழங்கல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் முழுமையான கணினி மயமாக்கல் இல்லாமல் வங்கிகளை இயக்குவது சவாலான காரியம் ஆகும்.  அந்த வகையில் கூட்டுறவுத் துறையில் கணினி பயன்பாட்டை அதிகரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது அவசியமாகின்றது.

கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதில் புகார் ஏதும் ஏழாத வகையில் முறையே செயலாற்றிட வேண்டும்.     இவ்வாறு நிதி அமைச்சர் பேசினார்.

மேலும்  இந்நிகழ்ச்சியில்,  மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த்,  மாநகராட்சி  ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங்,  மாவட்ட வருவாய் அலுவலர் ர. சக்திவேல்,  சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆ. வெங்கடேசன், எம். பூமிநாதன்,  மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி,  மதுரை மாநகராட்சி துணைமேயர் நாகராஜன்,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜீவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

 

Media: Murasoli