எனக்கு முதல்வர் அளித்துள்ள துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு நிதி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Published Date: September 26, 2022

CATEGORY: POLITICS

மதுரை,செப்.25: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளால், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விரைவில் விளைவுகளை சந்திப்பார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வளர்ச்சி, நிதி மேலாண்மை முக்கியம் என்ற போதிலும் மனிதாபிமானம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு தமிழகஅரசு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு முகாம்கள் அமைத்து மும்முரமாக பணியாற்றி வருகிறது.

எனக்கு முதல்வர் அளித்துள்ள துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு நிதி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையில் பல்வேறு வழக்குகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.  அதனை பொதுவெளியில் சொல்ல முடியாது. முன்னாள் அமைச்சர்கள் விரைவில் விளைவுகளைச் சந்திப்பார்.

தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் பொய்யான தகவல்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசி வருகிறார். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வும் இந்தஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது அதனைக் கடந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறையோடு ஒப்பிட்டு பேசுவது அடிப்படை புரிதல் இல்லாதது.

குறிப்பாக இலவச மடிக்கணினி தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு விட்டன.

ஆனால், தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றுப்பெயரில் கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகையாக வழங்கி வருகிறோம் மேலும், தாலிக்கு தங்கம் திட்டம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வந்ததால் ஏராளமான மனுக்கள் குவிந்தன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையில் வருவாய் பற்றாக்குறை இல்லாத சராசரி மாநிலமாக தமிழகம் இருந்தது. 2016-க்குப் பிறகு அதிமுக அரசு செயல்திறன் அற்ற நிதி மேலாண்மை திறன் இல்லாத அரசாக இருந்துவிட்டு தற்போது திமுக அரசைக் குறை கூறுவது தவறானது.

மத்திய அரசின் பொது நிதியிலிருந்து பெரும் கடன் தொகையை கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் பெற்று சுருட்டிக் கொண்டனர். கூட்டணி கட்சி என்ற முறையில் மத்திய அரசும் இவர்களை கேள்வி கேட்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை.

கடந்த அதிமுக அரசு நிலுவையில் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் ரூ.47 ஆயிரம் கோடியாகக் குறைத்துள்ளோம்.

8 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் சரிய விட்ட வருவாய் பற்றாக்குறையை 3 நான்கு ஆண்டுகளில் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், பொங்கல் பரிசு, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றார் அவர்.

Media: Dinamani