காலநிலை மாற்ற இயக்கத் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

Published Date: December 10, 2022

CATEGORY: CONSTITUENCY

சென்னை, டிச.10- காலநிலை மாற்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும்! இயற்கையைக் கெடுக்காத வளர்ச்சியும் வேண்டும் எனவும், தமிழகம் சமூக நீதியில் மட்டுமல்ல இந்தியாவிற்கு சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் எனக் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.12.2022) சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத் தொடக்க விழாவில் ஆற்றிய உரை வருமாறு:

தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல: இந்தியாவுக்காக மட்டுமல்ல உலகத்தின் நன்மைக்காக இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கைக்கு எல்லை இல்லை. இயற்கைக்கு வரையறை இல்லை. இயற்கை என்பது அனைவருக்கும் பொதுவானது. இயற்கையைக் காக்க வேண்டிய கடமையும் அனைவருக்கும் உரியது என்கின்ற அடிப்படையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது   .

இது இந்தியாவுக்கான பிரச்சினை மட்டுமல்ல! இது உலகளாவிய பிரச்சனை! அரசாங்கம் மட்டுமே தீர்த்து விடக்கூடிய பிரச்சனை அல்ல! அதனால்தான், நார்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சோல்ஹிம், இந்தியத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா அவர்கள், அரசு சாரா உறுப்பினர்களும் இணைந்து இது ஒரு மாநாடாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி!

இன்றைக்கு ஐ.நா. அமைப்பாக இருந்தாலும் உலகின் பல நாடுகளாக இருந்தாலும் ஒரே ஒரு பிரச்சனையைப் பற்றி தான் அனைவரது கவலையும்! அதுதான் காலநிலை மாற்றம்! மானுடத்தின் மிக முக்கிய பிரச்சினையாகக் காலநிலை மாற்றம் என்பது இருக்கிறது. இதனைத் தமிழ்நாடு அரசும் மிக முக்கியப் பிரச்சினையாகக் கருதுகிறது என்பதை ஆட்சிக்கு வந்தது முதல் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதனால்தான், இந்தியாவிலேயே மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக காலநிலை மாற்ற இயக்கத்தைத் துவக்கி வைப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

இதனை ஒரு வரலாற்று கடமையாக மட்டுமல்ல: எனது வாழ்க்கைக் கடமையாகவும் நான் பார்க்கிறேன் “நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” என்று தொல்காப்பியம் தொடங்கி, “நீரின்றி அமையாது உலகம்” என்ற வள்ளுவம் வரை, சூழலைப் போற்ற வேண்டியதன் தேவையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியது தமிழ்ச்சமூகம். அதனால்தான், அந்தப் பாதையில் நமது அரசு இன்று செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு இந்தியாவிற்கு சமூக நீதியில் மட்டுமல்ல. சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி, தொழில், மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு பக்கம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்தியாக வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையைக் கெடுக்காத வளர்ச்சியும் வேண்டும். இதுதான் எங்கள் அணுகுமுறை!

நமக்கு இயற்கை உணர்த்தும் பாடம்!

உங்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்திக் கொள்வீர்கள் என்று தந்தை பெரியாரிடம் கேட்டபோது, “நான் இயற்கை மனிதன்” என்று சொன்னார். “செயற்கையான அடையாளங்கள் எதுவும் எனக்குக் கிடையாது” என்றார். “மானுடப்பற்று மட்டுமே எனக்கு உண்டு” என்று சொன்னார். அத்தகைய இயற்கை மனிதர்களாக: மானுடப்பற்று மட்டுமே கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும். வாழ்ந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை நமக்கு இயற்கை உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

  • அதிகமான வெயில்அதிகமான மழைகாலம் தவறி பெய்யக்கூடிய மழை, மழை பெய்யாமலே போவதுஅதிகப்படியான வெப்பம்வெள்ளம்சுனாமிநிலநடுக்கம்நிலச்சரிவுபுதிய புதிய நோய்கள்உடல் நலமும் மன நலமும் பாதிக்கப்படுவதுஉணவுப்பொருள் தட்டுப்பாடுமண்வளம் குறைதல்காற்று மாசுபடுதல்இவை அனைத்தும் அதிகமாக ஏற்படுவதை இன்று கவனித்து வருகிறோம். 
  • பெங்களூர்சென்னை மட்டுமல்ல: உலக அளவில் பல பெரு நகரங்களில் ஏற்படும் வெள்ளம்
  • தெலுங்கானாவில், உத்தரகாண்டில் மேகவெடிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள்
  • கேரளாவில் ஏற்படும் நிலச்சரிவுகள்

என எல்லாப் பக்கமும் நாம் பேரிடர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 

வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் அளவு அதிகரித்ததன் காரணமாக, புவியின் வெப்பநிலை அதிகரித்து காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.  இதன் காரணமாக, மனிதர்கள் மட்டுமல்லாமல் பல்லுயிர்களும் பாதிக்கப்பட்டன.  இந்த பாதிப்பின் விளைவுகளைத்தான் நேரடியாகக் கண்டு வருகிறோம்.   இவை நமக்கு மட்டுமல்லஅனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து நாடுகளுக்கமான பிரச்சனை!

காலநிலை மாற்றத்தை உலகம் எதிர்கொள்ளஅதன் தாக்கத்தை மட்டுப்படுத்த, 2050ஆம்  ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்ட வேண்டும் என்று பல்வேறு பன்னாட்டு ஆய்வுகளும் உச்சி மாநாடுகளும் அறிவுறுத்துகின்றன.

நமது திராவிட மாடல் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கடந்த ஆண்டு க்ளாஸ்கோவில்(Gloscow) நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் அவர்கள், “  இந்தியா வரும் 2070 ஆம்  ஆண்டிற்குள் கார்பன் சமநிலையை எட்டி விடும் என்று  அறிவித்திருந்தார். இது எவ்வளவு தீவிரமான பிரச்சனை என்பதைத்தான் பிரதமரின் உரையும் உணர்த்துகிறது.

கடந்த ஆண்டு கழக அரசு பொறுப்பேற்றதும் பல முன்னெடுப்புகளை அறிவித்துச் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.  இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது. 

  • துறையின் பெயரை சுற்றுச்சூழல் மற்றும்      காலநிலை    மாற்றத்துறை என்று அறிவித்தோம்
  • தமிழகத்திற்கான காலநிலைத் திட்டத்தை அறிவித்தோம்.
  • நிதிநிலை அறிக்கையில் அதற்கென 500 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறோம்.
  • தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழகத்தின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.   இந்தத் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர்  நான் துவக்கி வைத்தேன்.
  • இதுவரை சுமார் 2.8 கோடி மரக்கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கார்பனை உள்வாங்கவும் பயன்படும்.

வெப்பமண்டல நாடுகளின் காலம் நிலையை கணிப்பது கடினம்!

 

  • பொதுவாகவே வெப்பமண்டல நாடுகளில் உள்ள காலநிலையை, பருவங்களைக் கணிப்பது கடினம். இதற்காகவே அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘காலநிலை ஸ்டுடியோ’ ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டுக்கு என தனியான மாதிரிகளை உருவாக்கவும் அதற்கான ரேடார்களை அமைக்கவும் 10 கோடி ரூபாய் ஒதுக்கி, திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.
  • ஒரு மாநிலத்தை கார்பன் சமநிலையை எட்டிய மாநிலமாக அறிவிக்க வேண்டுமெனில், அம்மாநிலத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளும் கார்பன் சமநிலையை அடையவேண்டும் தமிழ்நாட்டில் உள்ள 10 கிராமங்களை மீள் தன்மையுடைய கிராமங்களாக மாற்றுவதற்குத் திட்டம் இன்று துவக்கப்படுகிறது.
  • காலநிலை மாற்றம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழில் முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க ‘காலநிலை அறிவு இயக்கத்தை’(Climate literacy) தமிழகத்தில் செயல்படுத்தப்போகிறோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.
  • கடல் அரிப்பைத்தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • பல்லுயிரியத்தைப் பாதுகாப்பதை இந்த அரசினுடைய முக்கியமான கடமையாகக் கருதுகிறோம்.  கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு சதுப்புநிலம் தான் இருந்தது. அதை நாங்கள் 13  ஆக உயர்த்தியுள்ளோம்.
  • அருகிவரும் உயிரினங்களான கடல்பசு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களைப் பாதுகாக்க காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளோம்.
  • இந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைக்க இந்தியாவிலேயே முதல்முறையாக “Tamilnadu Green Cilmate Company” உருவாக்கப்பட்டு இவற்றை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

 

மீண்டும் மஞ்சப்பை இயக்கம் துவக்கப்பட்டது!

  • மக்கள் கடைகளுக்குச் செல்லும்போது வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச் செல்லவேண்டும்.  பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான குறியீடாகமீண்டும் மஞ்சப்பைஇயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, “ காலநிலை மாற்ற நிர்வாகக் குழுஎனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.  அதில் பல்வேறு விஷயங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த அரசு சாராத பலரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இன்னும் சில முக்கியமான அறிவிப்புகளை இன்று வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

காலநிலை மாற்றத்தை அறிந்து திட்டங்களை செயல்படுத்துவோம்!

  • பசுமைத் திட்டங்களுக்கான”  அனுமதியை இனிமேல் ஒற்றைச்  சாளர முறையில் வழங்கும் வகையில்தொழில்துறையில் உள்ள Guidance TN ஆல் திட்டங்கள் வகுக்கப்படும்.  இந்த முடிவு 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் முயற்சியில் பெரும் பங்கு வகிக்கும்.
  •  புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச் செல்லவும் தனியான பசுமை வழித்தடம் ( Green Corridor)  உருவாக்கப்படும். 
  • காற்றாலைகளைப் புதுப்பிப்பதற்கான புதிய கொள்கை (Repowering Poilcy)  எரிசக்தித்  துறையால் வெளியிடப்படும்.
  • அனைத்துத் திட்டங்களையும், கொள்கைகளையும் காலநிலை மாற்றப் பார்வையில் பார்த்து, ஆய்வு செய்து செயல்படுத்தவிருக்கிறோம்.
  • தமிழ்நாடு அரசு 1000 கோடி ரூபாயில் Green Climate Fund பசுமை நிதியம் ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.  அதன் முதற்கட்டமாக, 100 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சூழல் சார்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதற்கு தேசிய அளவிலும் உலக அளவிலும் நிதி திரட்ட இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.

  • காலநிலை மாறுபாடுபுதுப்பிக்கத்தக்க எரிசக்திசுழற்சிப் பொருளாதாரம்வளங்குன்றா வளர்ச்சி  போன்ற துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவங்குவோருக்கு தமிழகஅரசு சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும்.

தமிழ்நாடு இந்தியாவிற்கு சமூகநீதியில் மட்டுமல்ல,   சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.  வளர்ச்சி தொழில் மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு பக்கம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்தியாக வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையைக் கெடுக்காத வளர்ச்சியும் வேண்டும். இதுதான் எங்கள் அணுகுமுறை! 

2070க்குள் தமிழகம் கார்பன் சமநிலையை அடையும்!

இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள

2070 ஆம் ஆண்டிற்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.  அதற்கான அனைத்துத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். 

சுற்றம் காப்போம்! சூழலையும் காப்போம்!

மண்ணையும் காப்போம்! மக்களையும் காப்போம்! 

இயற்கையை காப்போம் !இன்னுயிர் காப்போம்!

பல்லுயிர் காப்போம்! மானுடப் பண்பாடு காப்போம்!

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

 

Media: Murasoli