மதுரையில் ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கான முகாமை சனிக்கிழமை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Published Date: September 25, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை செப் 24: மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மதுரை மாநகராட்சி 4 மண்டலங்கள் மற்றும் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்கள் வாரியாக சனிக்கிழமை தொடங்கி அக்.12 ஆம் தேதி வரை இந்த முகாம்கள் நடைபெறும்.

மதுரையில் ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கான முகாமை சனிக்கிழமை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது: நலத்திட்ட உதவிகள் தேவைப்படும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கைக்கும், அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிக்கும் இடைவெளி இருந்து வருகிறது.

இதை குறைக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பதிவு செய்பவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படும்.

பொதுமக்களின் தேவைகளின் அடிப்படையில் பயானளிகள் குறித்த தகவல் தொகுப்பை உருவாக்கி அதன் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைமுறை எனது தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அரசு நலத்திட்டங்களும், சிலருக்கு தனிப்பட்ட முறையிலும் உதவிகளைச் செய்து வருகிறோம் என்றார்.

மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ்சேகர் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், சட்டப்பேரவை உறுப்பினர் மு.பூமிநாதன், துணை மேயர் தி. நாகராஜன், மதுரை கோட்டாட்சியர் சுகி பிரேமலா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர். ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக பரிசோதனை மற்றும் அளவீடு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் 791 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Media: Dinamani