சட்டப்பேரவையில் தாக்கல் செய்து - நிதி, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் உரை!

Published Date: January 8, 2022

CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

சட்டப்பேரவையில் நேற்று, தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் 2021-2022 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை, சட்டமன்றப் பேரவை முன் வைத்து ஆற்றிய உரை வருமாறு:-

 

2021-2022 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தின் முன் வைக்க விழைகிறேன். துணை மானியக் கோரிக்கைகளை விளக்கிக் கூறும் விரிவான ஒரு அறிக்கை இம்மாமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்துணை மதிப்பீடுகள், மொத்தம் 3,719.65 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன. 

 

2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதுப்பணிகள் மற்றும் 'புது துணைப்பணிகள்  குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர் பாராச்செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வதும் இத்துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.

 

2022-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளிற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிகத் தொகுப்பு மற்றும் கரும்பு வழங்க கூடுதலாக 887.66 கோடி ரூபாய் அரசு அனுமதித்துள்ளது. கொரோ னா காலத்தின் போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நடவடிக்கையாக, மளிகைப் பொருட்களின் விநியோகித்ததில் மீதத் தொகையான 132.59 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண்.13 -உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை) என்பதன் கீழ் 1,020.25 கோடி ருபாய் சேர்க்கப்பட்டுள்ளது.

 

15வது நிதிக் குழுவின் சுகாதாரத் துறைக்கான மானியத்தைப் பயன்படுத்துவதற்காக அரசு 805.93 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இதற்கென துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண். 19- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை என்பதன் கீழ் 300 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. மீதத் தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பிலிருந்து மறுநிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.

25.10.2021 முதல் 14.11.2021 வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டு, நிவாரணம் மற்றும் தந்காலிக சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அதன் தொடர்பான துறைகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 300 கோடி ரூபாய் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண்.51 இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு" என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

 

2021-22 ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் உடனடிச் செலவினங்களை மேற்கொள்வதற்காக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு அரசால் பங்கு மூலதனத் தொகையாக 3,000 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண். 26- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை என்பதன் கீழ் 1000 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. மீதத் தொகை, மானியத்தில் உள்ள சேமிப்பிலிருந்து மறுநிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.

 

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு அரசு 418.61 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இதற்கென துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண்.26 - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை என்பதன் கீழ் 138.15 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. மீதத்தொகை மானியத்தில் உள்ள சேமிப்பிலிருந்து மறுநிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.

 

கரும்பு விவசாயிகளுக்கான நியாயமான மற்றும் ஆதாய விலை நிலுவைத் தொகையை வழங்குவதற்காக, 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகை  முன் பணமாக 182.14 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண்.27 - தொழில் துறை என்பதன் கீழ் சேர்க்கப் பட்டுள்ளது.

 

7.5 சதவீதம் முன்னுரிமை ஒதுக்கீட்டின் அடிப்படையில், பொறியியல் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக 74.28 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண். 20 -உயர்கல்வித் துறை என்பதன் கீழ் சேர்க்கப் பட்டுள்ளது.

 

2021-22 ஆம் ஆண்டில் செலுத்தக்கூடிய அனைத்து மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களின் தொழிலாளர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு 2020 - 21 ஆம் ஆண்டின் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை

வழங்குவதற்காக அனைத்து மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் வழிவகை முன்பணமாக 97.75 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடு களில் மானியக் கோரிக்கை எண்.48- போக்குவரத்துத் துறை" என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

 

மறுவாழ்வு முகாம்களிலுள்ள 18,966  இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்குவதற்காக 8.66  கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. ஆரம்பகட்டச் செலவினங்களை மேற்கொள்ள எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணமாக 7.15 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கென துணை மதிப்பீடுகளில் "மானியக் கோரிக்கை எண். 38- பொதுத்துறை என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. மீதத் தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பிலிருந்து மறு நிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.

 

இத்துணை மதிப்பீடுகள். திருத்த வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளின் மொத்த செலவி னத்தில் சுமார் 1 சதவீதமாக உள்ளது என்பதை இங்கு குறிப்பிடுவதற்குக் கடமைப்பட்டுள் ளேன், முதலமைச்சர் அவர்களின் சீறிய வழிகாட்டுதலின் கீழ் இந்த அரசு மேற்கொண்ட விவேகமான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய அன்றாட செயல்பாடுகளின் காரணமாக இத்தகைய நிதி ஒழுங்கு முறையை அரசு எய்தியுள்ளது.

 

பேரவைத் தலைவர் அவர்களே, 2021-2022 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை இம்மாமன்றம் ஏற்று இசைவளிக்க வேண்டுகிறேன். 

இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராசன் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து - நிதி அமைச்சர் தாக்கல் செய்த, 2021- 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் முதல் துணை மதிப்பீடுகளுக்கு இசைவுபெற, அதனைப் பேரவைத் தலைவர் குரல் வாக்கெடுப்பிற்கு விட்டார் -அஃது. அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது

 

Media: Murasoli