/

வளைந்து கொடுப்பது வழக்கமாக்கப்பட்டால், நிமிர்ந்து நிற்பது குற்றமாகதான் பார்க்கப்படும்

Published Date: June 25, 2021

திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மே 7ஆம் தேதியிலிருந்து புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து , திரு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மாநிலத்தில் முந்தைய அதிமுக அரசாங்கத்திடமும்,‘ஒன்றியத்தில்’ ஆளும் பாஜக அரசாங்கத்திடமும் பல கேள்விகளை கேட்டுள்ளார். மாநிலத்தின் நிதிநிலை இக்கட்டான சூழலில் உள்ள நிலையில், அதை சரி செய்யும் பெரிய பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலீட்டு வாங்கியாளாராக பணிபுரிந்த அவர் தன்னுடைய பதவிக்காலம் முடிவடையும் முன்பே மாநிலத்தின் நிதிநிலைமையை 2014 ஆம் ஆண்டு இருந்தது போல மாற்றவேண்டும் என்று விரும்புகிறார்.

 

தேர்தல் வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்ற தவறிவிட்டிர்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே ?

எங்கள் தலைவர் தேர்தல் அறிக்கையை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கிறார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதில் இருக்கும் பல திட்டங்களுக்கு நிதி தேவைக்கு படுகிறது என்ற காரணத்தால் தலைமை நிதி அதிகாரியாக நான்தான் இதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். மக்கள் முடிவு செய்யட்டும். நானோ, நீங்களோ அல்லது எதிர்க்கட்சி என்ன நினைக்கிறது என்பது முக்கியமல்ல. எதிர்கட்சி MLA வாக 5 வருடங்கள் நான் செய்த பல சட்டமன்ற மக்கள் நல பணிகள் முன்மாதிரியாக உள்ளன. நிச்சயமாக சிறந்த நிர்வாகத்தை வழங்கி தமிழ்நாட்டை நிதி ரீதியாகவும் மற்ற எல்லா வகையிலும் வெற்றி பாதைக்கு இட்டு செல்வோம்.

நாம் அனைத்தையுமே ஒப்பீட்டளவில்  GSDPயை கொண்டு பார்க்கவேண்டும். தமிழகத்தின் GSDP 20 இலட்சம் கோடி.  நமது மாநிலத்தின் வருமானம் அந்த 20 இலட்சம் கோடியில் 15%-18% ஆக இருந்தது. மேலும் கடன் வாங்குவதில் 3% ஆக இருந்தது. முதலில் GSDP சார்ந்த இந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்ந்துவிட்டால் பிறகு வேகமாக பல முக்கிய முடிவுகளை எடுக்கமுடியும். வேறு ஒரு இடமாக இருந்திருந்தால் மக்கள் எங்களை இதற்கு பாராட்டி இருப்பார்கள் ஏனெனில் நிதி நெருக்கடி இருக்கும் இந்த காலத்திலும் கூட நாங்கள் ஒரு வழியாக 20 ஆயிரம் கோடியை கோவிட் தொற்றை கட்டுப்படுத்தவும், 4000 ஆயிரம் ருபாய் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க முடிந்தது. இதற்கு அரசு 9 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டது. வெறும் 45 நாட்களில் நாங்கள் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் இல்லாத கூடுதல் 20,000 கோடி ரூபாயை செலவிட்டோம்.

 

திமுக அரசாக இருந்தாலும் சரி, அதிமுக அரசாக இருந்தாலும் சரி , ஆட்சி முடியும்போது அரசு கஜானாவை காலியாக விட்டு செல்வது ஏன்?

நான் இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 2011ல் திமுக ஆட்சி பொறுப்பை விட்டு செல்லும்போது என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2008-2009 மற்றும் 2009-2010ல் உலக பொருளாதார நெருக்கடி நிலையிலும் அந்த 5 வருடங்களில் தமிழ்நாடு வருவாய் உபரி அதிகம் உள்ள மாநிலமாக இருந்தது.அதுமட்டுமல்லாமல் உபரியாக அன்றைய காசுக்கு ருபாய் 2600 கோடி ரூபாயை விட்டுச்சென்றோம். இது அப்போதிருந்த GSDPயில் 0.05 அல்லது 0.03% ஆகும்.

கடந்த 10 ஆண்டுகள் மோசமான நிதி மேலாண்மை நடந்துள்ளது. எல்லோரும் அதை சொல்கிறார்கள் -  CAG அறிக்கை, நிதி குழு,ரிசர்வ் வங்கி என அனைவரும் கூறுகிறார்கள். இதை வேறு ஒரு வகையில் விளக்குகிறேன். கடந்த 25-30 வருடங்களில் ஒவ்வொரு நிதி குழுவும் எங்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய வரிப்பணத்தை தொடர்ந்து குறைத்துக்கொண்டு வந்தார்கள். இதற்கு அவர்கள் சொன்ன காரணம் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட உயர்ந்த சராசரியை கொண்டுள்ளது என்று கூறினர். முன்பைவிட இப்போது நமக்கு சேர வேண்டிய மத்திய வரிப்பணம் குறைவாக இருக்கிறது என்றால் நமது மாநிலம் சராசரியை விட அதிகமாக வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம். 30 வருடங்களில் முதன்முறையாக நிதி குழு நமது பங்கை வெறும் 0.5%-0.15% உயர்த்துகிறது என்றால் நமது செயல்திறன் குறைந்துள்ளது, நிதிநிலை சீர்கெட்டுள்ளது என்று அர்த்தம். 

 

மாநிலத்தின் மொத்த கடன் எவ்வளவு?

திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி, அவர்கள் கூறியது 4.9 லட்சம் கோடி. நிச்சயமாக இதை விட அதிகமாக தான் இருக்கும் என்று நான் கூறுவேன் ஏனெனில் 50,000 கோடி வட்டியாக ஒரு வருடத்திற்கு செலுத்தும்போது ஏதோ ஒரு மறைமுக காரணத்திற்கு இந்த வட்டியை காட்டுகிறோம். வெள்ளை அறிக்கை மூலமாக நான் இது ஏன் நடந்தது. எப்படி நடந்தது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன். ஒரு நிலையான தலைமை இருந்தவரை எல்லாம் சரியாக  சென்றுகொண்டிருந்தது. ஆனால் என்றைக்கு தலைமை சிதைய ஆரம்பித்ததோ அன்றைக்கு வீழ்ச்சி தொடங்கியது. நான் கூறவருவது முன்னாள் முதலமைச்சர் சிறை சென்ற போதும், உடல்நல குறைபாட்டால் செயல்பட முடியாமல் போன நாட்களை பற்றி. தலைமைத்துவம்  மிக முக்கியம். மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஆளுமை ஒருவர் இருந்திருந்தால் இது போன்று நடந்திருக்காது. ஆனால் அப்போது இருந்த தலைவரோ கண்மூடித்தனமான விசுவாசிகளை  வைத்துக்கொண்டு ஒரு சர்வாதிகாரி போல்  ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார். அதன் பலனை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

 

மத்திய அரசு மாநிலத்தின் வருவாயை பறித்துக்கொள்கிறது என்று கூறுகிறீர்கள். அப்படி என்றால் ஒரு கடுமையான அணுகுமுறையை பின்பற்றி உங்களுக்கு வரவேண்டிய தொகையை பெற்றுக்கொள்வீர்களா?

கடுமையான அணுகுமுறை என்றால் என்ன என்று வரையறுத்து கூற முடியுமா ? என்றைக்கு நாங்கள்  கடுமையான அணுகுமுறையை எடுத்துள்ளோம்?

திரு எடப்பாடி பழனிசாமியும், திரு ஒ.பன்னீர்செல்வமும் எடுத்த அணுகுமுறையை விட நீங்கள் எடுத்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது..

வளைந்து கொடுப்பது வழக்கமாக்கப்பட்டால், நிமிர்ந்து நிற்பது குற்றமாகதான் பார்க்கப்படும். எங்கள் தலைவர் மிக தெளிவாக இருக்கிறார். நானும் சட்டமன்றத்தில்  தெளிவாக கூறி வருகிறேன்.  இங்கேயும் கூறுகிறேன். நாங்கள் ஒன்றிய அரசுடன் நல்ல முறையில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்முகமார்ந்த வகையில் நான் தேர்தலில் வென்று பதவி ஏற்றுக்கொண்ட உடனே என்னை வாழ்த்தினார். GST குழு கூட்டத்தில் நான் எனது வாதத்தை எடுத்து வைத்தபோது,அதை மற்ற 31 மாநிலங்களுக்கும் அனுப்பினார். அவர்களும் (ஒன்றிய அரசு) எங்களை மரியாதைக்குறைவாக  நடத்தவில்லை , நாங்களும் அவர்களை குறைந்து மதிப்பிடவில்லை. எங்கள் தலைவர் என்ன சொன்னார் ? “உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்”. யாருக்கும் மோதலில்  விருப்பமில்லை. நாங்கள் என்ன முட்டாள்களா ? நாங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தேவை. எங்களுடைய SGST யை பெற்று எங்களிடமே அவர்கள் வழங்குகிறார்கள். நாங்கள் எதற்காக அவர்களோடு தகராறு செய்ய போகிறோம் ?

 

பிறகு ஏன் கூட்டாட்சி , மாநில சுயாட்சி போன்ற முழக்கம்  எல்லாம் ?

இது இப்போது கூறப்பட்டதல்ல. உங்களுக்கு  வேண்டுமானால் இது புதிதாக தெரியலாம். நீதி கட்சி இருந்த நாட்களிலிருந்து இருந்தது. சுயமரியாதை, தன்னம்பிக்கை, சுய நிர்ணய உரிமை ஆகியவற்றிற்கு இதுதான் நீட்சி. நாங்கள் எப்போதும் அதிகார பகிர்வுக்கு ஆதரவாக பேசி வந்துள்ளோம். நீதிக்கட்சி, திராவிடர் கழகம் , திராவிட முன்னேற்ற கழகம் , பேரறிஞர் அண்ணா , தலைவர் கலைஞர் ,இன்றைய முதல்வர் என அனைவரும் ஒரே கொள்கையையே பின்பற்றி வந்துள்ளனர். மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருந்த போது கூட்டாட்சியை அதிகமாக ஆதரித்து பேசினார். மாநில உரிமைகளை மீறக்கூடாது என்று  அவர் பேசிய 12-15 வாசகங்களை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். அவர் இப்போது மாறிவிட்டார். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. 

Source: The Times of India

 

 Articles Year Wise: