ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பளித்தால் இறைவனே வந்தாலும் மக்களை காப்பாற்ற இயலாது “பி.டி.ஆர்

Published Date: February 9, 2022

CATEGORY: POLITICS

மதுரை மாநகராட்சியில் மீண்டும் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பளித்தால் இறைவனே வந்தாலும் மக்களை காப்பாற்ற இயலாது :நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கூறி வார்டு மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் போட்டிகள் கடுமையாக உள்ளது. இதனால் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஒருபகுதியிலும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் தங்களது ஆதரவாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் மதசார்பற்ற  முற்போக்கு கூட்டணியில் மதுரை மாநகராட்சி 56 வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜென்னியம்மாள் அவர்களை ஆதரித்து பொன்னகரம் பகுதியிலும், மதுரை மாநகராட்சி 59 வது வார்டில் போட்டியிடும்  தி.மு. வேட்பாளர் மகாலெட்சுமி அழகு சுந்தரம்  அவர்களை ஆதரித்து வைத்தியநாதபுரம் பகுதியிலும் வாக்கு சேகரித்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "ஒரு தொகுதியில் 22  வட்ட செயலாளர்களின் பணியை ஒரு சட்டமன்ற உறுப்பினரோ , அமைச்சரோ செய்திட இயலாது. அதனால் தான் மாமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்றாகும். எனது தொகுதியை பொறுத்தமட்டில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உட்கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளேன். ஆனாலும் 100 % அந்த பணிகளை முழுமையாக பார்க்க இயலவில்லை என்பது உண்மை.

 

வருகிற தேர்தலில் எந்த அளவிற்கு திமுகவிற்கு வாக்களித்து எந்த அளவிற்க்கு மெஜாரிட்டி ஏற்படுத்தி தருகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நன்மை. 5 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தலை நடத்திடாமல் ஊழலுக்காகவே 1000 கோடிக்கு மேல் திட்டங்களை தீட்டி அதனை தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டனர். மீண்டும் மதுரை மாநகராட்சியில் மீண்டும் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பளித்தால் இறைவனே வந்தாலும் மக்களை காப்பாற்ற இயலாது. என் மேல் வைத்த நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் இரண்டாவது முறை 34000  வாக்குகள் வித்தியாசத்தில்  அளித்த  வெற்றி வாய்ப்பின் மூலம் தலைவர் எனக்கு நிதித்துறை ,மனிதவளத்துறை, ஓய்வூதியம்   உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அடங்கிய துறையை கொடுத்து இருக்கிறார். இந்த பொறுப்பை வைத்து மாநிலத்திற்கு பல நன்மைகள் செய்து வருகிறேன்.

 

கோட்டையில் இருந்து முதலமைச்சர் ஆதரவுடன் என்னால் மதுரைக்கு நிதிகளை ஒதுக்கிட முடியும் .முதலமைச்சர் அறிவித்துள்ள குடிநீர், பாதாளசாக்கடை ,வடிகாலுக்காக ஒருங்கிணைத்த மாநகர் திட்டத்தின் கீழ் 500 கோடி ஒதுக்கி உள்ளார் .இத்திட்டம் குறித்து கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்து இருந்தேன்.100  வார்டுகளிலும் 24 மணி நேரமும் நாட்களும்  தண்ணீர் கிடைத்திட அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் .தண்ணீர் திருட்டு நடைபெறாமல் தடுத்து அதனை உங்களிடம் கொண்டு சேர்ப்பது கடமையாகும் இரண்டாவது பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகாலுக்கு முறையான திட்டத்தை உருவாக்கி அடைப்பு இல்லாமல் செய்வது அத்தனையும் நிறைவேற்ற உள்ளோம். மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிகளும் 25 கோடியில் முதலமைச்சர் அறிவிப்பின் படி நடைபெற உள்ளது. இது போன்ற திட்டப்பணிகளை மக்களுக்கு அருகில் நின்று செயல்படுத்துபவர்கள் மாமன்ற உறுப்பினர்கள். எனவே அத்தகைய உறுப்பினர்கள் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களாக, கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே இணைந்து செயல்பட்டு எங்களுக்கு கட்டுப்பாட்டில் திட்டப்பணிகளை மக்களிடம் கொண்டு போய் முழுமையாக சேர்க்க முடியும் எனவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றபெறச் செய்ய வேண்டும் என்றார் .

Media: ABP News