/

பத்திரப் பதிவில் மதுரையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது .கோயில் நிலத்தியிலேயே ஆக்கிரமிப்பு செய்து பதிந்த நிகழ்வுகளும் நடைபெற்றது.அப்படி இருக்கும் போது மதுரையில் பத்திர பதிவிற்கு தகவல் பற்றாக்குறை உள்ளபோது, ஒரே நாடு ஒரே பதிவு என்றால் உதாரணமாக, குஜராத்தில் உள்ளவர்கள் மதுரையில் உள்ள கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்தால் என்ன செய்வது

Published Date: February 19, 2022

"ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை. அது, அடிப்படை அறிவு இல்லாமல் சொல்லப்படுகிற வாதம்” என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

 

மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமது வாக்கினை பதிவு செய்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அளித்த பதில்கள்:

 

திமுக ஆட்சியையும் தமிழக சட்டமன்றத்தையும் முடக்கப்போவதாக கூறிவரும் அதிமுகவினர் பற்றி ?

 

"ஜனநாயகத்திற்கு விரோதமாக ஊழலுக்காக 5 வருடம் ஆட்சியில் நீடித்தவர்கள், ஜனநாயக மரபுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி பெற்ற அரசை முடக்கப்போவதாக சொல்வது உளறுவது போல இருக்கிறது."

 

ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி ?

 

"சாத்தியமில்லை, அடிப்படை அறிவு இல்லாமல் சொல்லப்படுகிற வாதம் ஆகும். ஒரே நாடு ஒரே பத்திரப் பதிவு என்கிறார்கள். பத்திரப் பதிவில் மதுரையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது .கோயில் நிலத்தியிலேயே ஆக்கிரமிப்பு செய்து பதிந்த நிகழ்வுகளும் நடைபெற்றது.அப்படி இருக்கும் போது மதுரையில் பத்திர பதிவிற்கு தகவல் பற்றாக்குறை உள்ளபோது, ஒரே நாடு ஒரே பதிவு என்றால் உதாரணமாக, குஜராத்தில் உள்ளவர்கள் மதுரையில் உள்ள கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்தால் என்ன செய்வது?"

 

உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது ?

 

"முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறந்த தலைமைத்துவத்தால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி அடையும்."

 

வாக்குக்கு பணம் குறித்த புகார்கள் பற்றி...

 

"என்னைப் பொறுத்தவரை வாக்கிற்கு ஒரு ரூபாய் பணம் கூட கொடுக்காமல் வெற்றி பெற்றவன் என்பதை வெளிப்படையாய் சொல்லிவிட்டு செயல்படுபவன் நான்."

 

ஜி.எஸ் டி கூட்டத்தில் தங்களது உரை குறித்து...

 

"ஒளிவுமறைவாக ,புள்ளி விபரம் இல்லாமல், நாளைக்கு நிரூபிக்க முடியாத கருத்தைப் பேசினால் இந்த மாதிரி பேசலாம். கூட்டத்தில் தகவலோடு உரையாற்றி என்னோட வாதத்தை அறிக்கையாக சமர்ப்பித்து இருக்கிறேன். இதனை பிரச்சினையாக்குவதாக சொன்னால் ஜிஎஸ்டி நிலைக்குழுவில் என்னை ஏன் உறுப்பினராக போட்டார்கள்? வதந்தி ஊடகங்களில் வரலாம் .என்னைப் பொறுத்தவரை தெளிவாகச் சொல்கிறேன் மத்திய நிதியமைச்சராக இருந்தாலும், மத்திய நிதித்துறை செயலாளராக இருந்தாலும் பல மாநிலங்களில் உள்ள நிதியமைச்சர், முதல்வர், துணை முதல்வர்களோடு இணைந்து பேசி நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் செயலாற்றிக்கொண்டு இருக்கிறோம் .

 

நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நானும் மகாராஷ்டிரா சுற்றுசூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே, மேகாலயா சுற்றுசூழல் துறை அமைச்சர் சங்மா கலந்து ஆலோசித்தோம். அனைவரும் ஒரே மாதிரியான கருத்தை எடுத்துரைத்தோம். செயல்பட வேண்டியது மாநிலங்கள், மாவட்டங்கள், உள்ளாட்சிகள். இதனை வைத்துதான் கட்டமைப்பை திருத்த முடியும். எல்லாவற்றையும் டெல்லியில் இருந்து செய்ய முடியாது எனச் சொன்னோம். இத்தனைக்கும் மேகாலயாவில் பாஜக கூட்டணியில் இருக்கிற அரசு. எனவே, உண்மையை யார் சொன்னாலும் உண்மைதான். எந்த குறையும் சொல்ல மாட்டேன்.

 

தமிழகத்தில் 2003-ல் இருந்து 2014 வரை நிதி நிலை சட்டத்திற்கு ஏற்ப இருந்தது .வருவாய் கணக்கில் பற்றாக்குறையே கொஞ்சம் உதிரியோ இருந்தது .2014-க்கு பிறகு ஜெயலலிதா சிறைக்கு சென்ற பிறகு சரியான தலைமை இல்லாததால் ஏழு ஆண்டுகளில் நிதி நிலைமை சரிந்து போனது. தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை அதிகரித்து கடன் வாங்க கூடிய எல்லையை மீறி சுமார் 30,000 கோடியை ஒளிவு மறைவாக எடுத்துள்ளார்கள் என்பதை வெள்ளை அறிக்கையில் காண்பித்து உள்ளேன் .

 

இந்தச் சூழலில் தமிழகத்தில் சிறந்த தலைமை திருப்பி வந்த பிறகு, பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பெட்ரோல் விலை குறைப்பு, மகளிர் சுயஉதவி குழு கடன் 2600 கோடி தள்ளுபடி, குடும்ப அட்டைதாரருக்கு 4000 என பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. இந்த ஆண்டு நிதி நிலைமை சீர்திருத்தத்தை காண்பிக்க போகிறோம். இதுதான் சிறந்த தலைமையின் அடையாளம். இதன் வெளிப்பாட்டை விளைவை வைத்து யாருடைய ஆட்சி சிறந்தது என்பதை மக்கள் முடிவெடுக்கட்டும்."

 

பெண்களுகளுக்கான ஊக்கத் தொகை எப்போது கொடுக்கப்படும் ?

 

"முதலமைச்சர் உறுதியாக கொடுக்கப்படும் என கூறியுள்ளார். அவர் கட்டளையில் பணியாற்றுபவன் நான். என்றைக்கு அளிக்க சொல்கிறாரோ அன்று ஏற்பாடு செய்ய வேண்டியது எனது கடமை."

 

நிதி நிலை அறிக்கை எப்படி இருக்கும்?

 

"ஒரு பட்ஜெட் என்பது வரக்கூடிய ஆண்டிற்கான இலக்கு. ஏற்கெனவே நான் எழுதியுள்ள கட்டுரையில் பட்ஜெட்டிற்கும், அதன் பிறகு திருத்திய மதிப்பீட்டிற்கும் சுமார் 40 முதல் 50 சதவிகிதம் வேறுபாடு உள்ளது. இதனை மாற்றி விளைவை அடிப்படையாக வைத்து இந்த வருடத்தின் கணக்கை ஒழுங்காக காண்பித்து, இதுதான் தலைமையின் பலன் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

 

தலை இல்லாத வால்கள், கால்கள் ஆட்சி நடத்தியதால்தான் தமிழகத்தில் நிதி நிலைமை சரிந்தது. வருவாய் பற்றாக்குறையை இந்த வருடம் திருத்துவோம். வாரம்தோறும் இதற்கான கூட்டம் நடத்தி கோப்புகளை தீவிரமாக ஆய்வு செய்து திருத்திக் கொண்டு வருகிறோம் .அதனை செம்மையாக செய்து முடிப்போம்" என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Source: Hindu Tamil

 Articles Year Wise: