/

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சன்னி வர்மாவுக்கு அளித்த நேர்காணலில் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தொடர்ச்சியாக மாநில அரசுகளில் செலவழிக்கும் சக்தியின் மீது தனது கட்டுப்பாட்டை அதிகரித்துவருகிற போக்கு பெரிய அளவிற்கு திறன் குறைபாட்டை உருவாக்குகிறது எனத் தெரிவித்தார்.

Published Date: February 21, 2022

மாநிலங்களிடம் இருந்து அதிகாரங்களை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளும் போக்கு சிக்கலை உருவாக்குகிறது. 

 

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சன்னி வர்மாவுக்கு அளித்த நேர்காணலில் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தொடர்ச்சியாக மாநில அரசுகளில் செலவழிக்கும் சக்தியின் மீது தனது கட்டுப்பாட்டை அதிகரித்துவருகிற போக்கு  பெரிய அளவிற்கு திறன் குறைபாட்டை உருவாக்குகிறது எனத் தெரிவித்தார். 



ஒன்றிய மாநில நிதி உறவுகள் குறித்து:

 

ஒன்றிய மாநில நிதி உறவுகளின் வரலாற்றை முதலில் கூறுகிறேன், டெல்லியிலிருந்து ஆள்பவர்களின் கூட்டாட்சிக்கு எதிரான, மாநிலங்களுக்கு எதிரான, சர்வாதிகார அணுகுமுறையே இப்பிரச்சனையின் தொடக்கம். அரசியலைப் பொறுத்தவரை ஒருவரின் நிலைப்பாடு என்பது அவர் எந்தப் பக்கம் அமர்ந்திருக்கிறார் என்பதை பொறுத்தது என்று ஒரு பழமொழி உண்டு. இதன் அடிப்படையில் பார்ப்போமேயானால் ஒரு பிரச்சினையில் உங்களது நிலைப்பாடு நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறீர்களா, சட்டமன்றத்தில் அமர்ந்து இருக்கிறீர்களா அல்லது வீதியில் நின்றுகொண்டு பேசுகிறீர்களா என்பதை பொறுத்தது. 

 

அந்த பழமொழிக்கு மிக சிறந்த உதாரணமாக விளங்குபவர் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். ஏனெனில் அவர் முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகளுக்கான வலிமையான குரலாக விளங்கினார், சில சமயங்களில் அந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மிஞ்சும் அளவிற்கு அவரது செயல்பாடு இருந்தது. ஆனால் அவர் பிரதமரானதும் அவரது செயல்பாடுகள் தலைகீழாக மாறியது. நிதி, நிர்வாகம், மாநில அரசுகளுக்கு அநீதி இழைக்கப்படும் ஒன்றிய அரசின் திட்டங்கள் என அனைத்து வகையிலும் மாநிலங்களின் உரிமைகளை முற்றிலும் பறிக்கும் அளவிற்கு இதவிட பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இதுவரையிலான இந்திய வரலாற்றில் இதுவே மிக மோசமான சர்வாதிகாரத் தன்மை மிக்க அதிகார பறிப்பு நடவடிக்கைகள் எனக் கூறலாம்.  பதிமூன்று ஆண்டுகள் குஜராத் முதல்வராக அவர் பதவிவகித்தபோது பேசியவற்றுக்கு மிக நேரடியாகவே தற்போது முற்றிலும் முரண்பட்டு செயல்படுகிறார். 

 

அடிப்படையான கலசூழல் இதுதான்  அவர்கள் மெல்ல மெல்ல நயவஞ்சகமான முறையில் மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் ஊடுருவினர். அவர்கள் தொடங்கிய இடம் ஒன்றிய அரசால் நிதி அளிக்கப்படும் திட்டங்கள். நேரடி மானியம் வழங்குதல் மற்றும் ஒன்றிய அரசு  திட்டங்களுக்கு ரூபாய் 4-6 கோடி அளவிற்கு நிதியளித்தலை தாறுமாறாக அதிகரித்தனர். இதனை அவர்களுக்கு சாதகமாக விளம்பரப்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை. ஆனால் அவர்களிடம் விளம்பரம் செய்வதில் புத்திசாலித்தனம் இருக்கும் அதே சமயம் தார்மீக அறம் மிகவும் குறைவாகவே உள்ளது. 

 

உதாரணமாக முதலில் அவர்கள் ஒரு திட்டத்தை அறிவித்து அதற்கு ஒன்றிய அரசு 70 சதவீதம் நிதி அளிக்கும் மாநிலங்கள் 30% நிதி பங்களிக்க வேண்டும் என்பார்கள் அத்திட்டத்திற்கு பிரதமரின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்வார்கள். அடுத்த ஆண்டு ஒன்றிய அரசு 50% நிதியும் மாநில அரசு 50 சதவீத நிதியை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பார்கள், மூன்றாவது ஆண்டு அவர்கள் 20 சதவீதம் மட்டுமே நிதி அளிப்பார்கள் மாநிலம் 80 சதவீதம் அத்திட்டத்திற்கு செலவு செய்யவேண்டும் என்பார்கள்.  இறுதியாக நான்காவது ஆண்டு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்காது ஆனால் மாநிலங்கள் தாமாகவே திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்கிற நிலைக்கு கொண்டு வருவார்கள்.  திட்டம் பிரதமரின் பெயரில் இருக்கும். இது அடுத்தவரின் செலவில் தன்னை விளம்பரம் செய்து கொள்ளும் விளையாட்டு. 

 

மாநில அதிகாரங்கள்:

 

அடுத்ததாக, பாலங்கள், துறைமுகங்கள், சாலைகள், மாநில எல்லைகள், கல்வி, சுகாதாரம், தேர்வுகள் மற்றும் கூட்டுறவு துறை ஆகியவற்றை நிர்வகிப்பது உண்மையில் 100%மாநில அரசுக்குறியது.  இவற்றில் சில அரசியல் அமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் மேற்கொள்ளாமல், எந்த குழுவும் அமைக்காமல் இத்துறைகளில் சட்டம் இயற்றுகின்றனர். இதன்மூலம் அவர்கள் தங்களுக்கு தொடர்பே இல்லாத மாநில அரசுக்கு உரிமையுள்ள துறைகளை கட்டுப்படுத்துகின்றன. 

 

இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் ஜனநாயகத்தின் தவிர்க்கமுடியாத கொள்கை,  ஒரு நிர்வாக அமைப்பு மக்களுக்கு எவ்வளவு நெருக்கமானதாக இருக்கிறதோ அவ்வளவு பொறுப்புள்ளதாக இருக்கும் என்பதாகும். 

 

எனவே முடிவெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு மிக அருகாமையில் இருக்கும் போது நிர்வாகம் பொறுப்பு உள்ளதாகவும் நல்ல விளைவுகளை உருவாக்கக் கூடிய வாய்ப்பும் அதிகரிக்கும் என்பது அடிப்படை கோட்பாடு. நீங்கள் மக்களுக்கும் முடிவு எடுக்கும் அதிகாரத்திற்கான இடைவெளியை அதிகரித்தால் அதில் அடிப்படையாக ஏற்படும் பிரச்சனை என்பது முடிவு எடுப்பவருக்கும் பயனாளிக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவது சிரமமாகும். எனவே இதில் வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால் ஒன்றிய அரசு தொடர்ந்து மாநிலங்களிடம் இருந்தும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும் அதிகாரங்களை தங்கள் வசம் எடுத்துக் கொள்ளும் போது இயல்பாகவே பல வழிகளில் சிக்கல்களை உருவாக்குகின்றனர்.

 

அவை இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அரசின் பொறுப்பு குறைகிறது,

 

 மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பங்களிப்பு இன்றி எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்த முடியாது.

 

ஒன்றிய அரசிடம் போதுமான பணியாளர்கள் இல்லை, போதுமான தரவுகள் இல்லை, அவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லை. 

 

நீங்கள் உங்களை மென்மேலும் அதிகார படுத்திக் கொள்வதன் மூலம் அதனை ஒருவரை பழிவாங்க, எதிர்மறையாகவும் பயன்படுத்தலாம். ஆனால் அதனைக் கொண்டு நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. உதாரணமாக அனைத்து தணிக்கை அறிக்கைகளையும் பாருங்கள், ஸ்வச் பாரத் கிரிஷி கல்யாண் என ஒன்றிய அரசின் திட்டங்களில் பணம் வீணாகிறது. இத் திட்டத்திற்கான நிதியைக் கொண்டு கழிப்பறைகள் கட்டப்படுகிறது ,ஆனால் அங்கு தண்ணீர் வசதி இல்லை.

 ஏனெனில், டெல்லியிலிருந்து கொண்டு நீங்கள் கழிப்பறைக்கு தண்ணீர் விடும் வேலையை கண்காணிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் தண்ணீர் விநியோகம் மாநில அரசினுடையதுகூட இல்லை,  உள்ளாட்சி அமைப்பின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

 

எனவே எத்தனை கழிப்பறைகள் கட்டினாலும் தண்ணீர் இல்லை என்றால் என்ன அர்த்தம் நீங்கள் செலவழித்த பணம் வீணாகிவிட்டது.  

 

ஒன்றிய அரசின் போலி கணக்குகள்:

 

ஒன்றிய அரசு இரண்டு விதமான கணக்கியல் யுத்திகளை பயன்படுத்துகின்றனர் அவற்றை நான் படைப்பாற்றல் மிக்க கணக்குகள் என்று கூறுவேன். காரணம் சரத்து 293(3), பாஜகவின் கூட்டணியான முந்தைய அதிமுக அரசு கூட ஒன்றிய அரசின் கடனை பெற எண்ணவில்லை ஏனெனில் அந்த நேரத்தில் அக்கடனை பெறுவது தூண்டிலில் சிக்குவது போன்றது என அவர்களுக்கும் தெளிவாக தெரிந்தது.  காரணம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடன் பெறக்கூடிய தொகையான ரூபாய் 300 கோடி அல்லது 500 கோடி என்பது மிக சொற்பமான தொகையாகும்… அதற்காக சரத்து293(3) ஐ செயல்படுத்தக் கூடாது என்ற கவலை முந்தைய ஆட்சியாளர்களுக்கும் இருந்தது. ஏனெனில் இக்கடனை  முன்கூட்டியே அடைக்க முடியாது, அது உங்களை 50 ஆண்டுகள் கட்டிப்போடும். 

 

பணத்தின் கால மதிப்பு என்ன என்பது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும், உங்களிடம் நான் 100 ரூபாய் கொடுத்து இதனை ஆண்டுக்கு இரண்டு ரூபாய் என்ற வீதம் அடுத்த 50 ஆண்டுகளில் செலுத்து, அதுவும் இன்றைய ரூபாய் மதிப்பில் என்று கூறுகிறேன் என்றால் நீங்கள் திரும்பச் செலுத்தப்படும் தொகை ரூபாய் பதினைந்து அல்லது இருபது ஆகத்தான் இருக்கும். ஏனெனில் பணவீக்கத்தின் காரணமாக அடுத்த 50 ஆண்டுகளில் இன்றைய இரண்டு ரூபாய்க்கு மதிப்பே இருக்காது. எனவே சில மட்டத்தில் 50 ஆண்டுகள் வட்டி இல்லாத சமமான தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்துதலுக்கும் மானியதிற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் இங்கு வேறுபடும் புள்ளி யாதெனில் ஏன் இந்தக் கடனை முன்கூட்டியே செலுத்தி அடைக்க முடியாது என்று ஒன்றிய அரசு கூறுகிறார்கள் என்பதே. இதுதான் அவர்களின் உள்நோக்கத்தை கேள்வி கேட்க வேண்டியதாக இருக்கிறது.

 

நாம் முன்கூட்டியே கடனை அடைக்க கூடாது என்பதில் ஏன் ஒன்றிய அரசுக்கு இத்தனை அக்கறை? எந்த அடிப்படையில் அதற்கு அர்த்தம் இருக்கிறது? இப்படி முன்கூட்டியே அடைக்க முடியாமல் செய்வதன் மூலம் அவர்களின் எந்த நோக்கம் நிறைவேறுகிறது? ஒருவேளை நான் கடனளித்தவனாக இருந்தால் அதனை முன்கூட்டியே ஒருவர் அடைப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஏனெனில் அந்தத் தொகைக்கு ஏதேனும் மதிப்பு இருக்கும்போதே அது எனக்கு கிடைக்கிறது. ஆனால் அதற்கு அனுமதிக்கப்படாத போது அதன் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டியதுள்ளது.

Source: Indian Express

 Articles Year Wise: