/

சமூக நீதி இயக்கமான திராவிட இயக்கத்தால் தமிழ்ப் பிராமணர்கள் துரத்தப்பட்டார்கள் என்பது ஒரு பொய் பிரச்சாரம்

Published Date: January 18, 2022

சமூக நீதி இயக்கத்தின் மூலமாக இணையற்றதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான பயன்களை இன்றைக்குத் தமிழ்நாடு அடைந்துள்ளது. மக்களுடைய அனுபவங்களால் மட்டுமல்லாது, அசைக்க முடியாத தரவுகளின் அடிப்படையிலும் இது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ்நாட்டைப் பற்றி வேறொரு சித்திரமும் தீட்டப்படுகிறது. சமூக நீதி இயக்கமான திராவிட இயக்கத்தால் தமிழ்ப் பிராமணர்கள் துரத்தப்பட்டார்கள் என்ற பொய் பிரச்சாரமே அது!

அமெரிக்காவின் மூன்று பெரும் பத்திரிகைகளில் ஒன்றான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ அப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ‘கமலா ஹாரிஸ் தனது தாயின் பின்னணியைப் பற்றிச் சொல்லாதது என்ன?’ என்ற தலைப்பில் துமே எழுதிய கட்டுரையே இப்படி ஒரு கட்டுரையை என்னை எழுதத் தூண்டியது. மிக மேலோட்டமானதாகவும், சிக்கலான பிரச்சினைகள் குறித்த தவறான புரிதலோடு இருந்த அந்தக் கட்டுரைக்கு மட்டும் அல்லாது, இப்படி ஒரு பிரச்சாரத்தைத் திட்டமிட்டு மேற்கொண்டுவருவோருக்குப் பதில் அளிக்கும் வகையிலேயே இதை எழுதுகிறேன்.

கமலா ஹாரிஸும் துமேவும்

கமலா ஹாரீஸின் தாயார் சியாமளா கோபாலன் பிறந்த பிராமணர்கள் சமூகம் தொடர்பில் அமெரிக்கர்கள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் துமே. இந்தக் கருத்தின் உள்கூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் ‘Cautionary Tale of Excess’ என்பார்கள், அதாவது அதைப் படிப்பவர்களுக்கு ஓர் அதிகப்படியான அபாய எச்சரிக்கையை உண்டாக்கும். அதற்கு மாறாக, விரிவான தமிழ் அரசியல் வரலாற்றைப் படித்தால், அது பயனுள்ள மற்றும் பின்பற்றுவதற்கான படிப்பினைகளை வழங்கும்.

ஒரு விவாதத்துக்கான தொடக்கப் புள்ளிக்கு ஏதுவாக, நான் புரிந்துகொண்ட அளவில் துமேவின் வாதங்களையும் முடிவுகளையும் இங்கே முன்வைக்கிறேன்:

 

  • தமிழ்ப் பிராமண சமூகம் தங்கள் சொந்த மாநிலத்தில் நியாயமற்ற விதத்தில் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்கிறார் துமே.
  • இந்த விளிம்புநிலையாக்கலுக்கு கமலா ஹாரிஸுடைய தாய் சியாமளா கோபாலன் (புலம்பெயர்வு 1958) போன்ற தமிழ்ப் பிராமணர்களின் புலம்பெயர்வு சான்றாகிறது; மேலும், முன்னாள் பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி (புலம்பெயர்வு 1978), ஆல்பபெட் நடப்புத் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை (புலம்பெயர்வு 1993) மற்றும் துமேவால் பெயர் குறிப்பிடப்படாத பலர், நோபல் பரிசு பெற்ற இருவர் உட்பட பலரின் எடுத்துக்காட்டுகள் துமேவின் கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ளன. 
  • குறிப்பிடத்தக்க சாதனை படைத்த, பெயர் குறிப்பிடப்பட்ட மற்றும் பெயர் குறிப்பிடப்படாத தமிழ்ப் பிராமணர்களின் புலம்பெயர்வு... அவர்களின் பூர்விகமான தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் குறிப்பிடத்தக்க இழப்பு என்கிறார் துமே.

  • இந்த விளிம்புநிலையாக்கலின் விளைவான புலம்பெயர்வுக்குக் காரணங்கள்: அ) சோஷலிஸம் (இந்தியா முழுவதும் -1947-ல் சுதந்திரத்துக்கு பின்), ஆ) 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தமிழ் அரசியலின் சின்னமாக விளங்கிய அடையாள அரசியல்; அதாவது திராவிட அரசியல் என்கிறார் துமே.

  • கடைசியில் துமே இத்தகு கொள்கை முடிவுகளுக்குச் செல்கிறார்: சோஷலிஸ கோட்பாடும் அடையாள அரசியலும் மக்களுக்கும் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் கேடு – இதற்கு தமிழ்நாடு வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதே சான்று!
  • இதற்கெல்லாம் எந்தப் புள்ளிவிவரத்தையும் துமே காட்டவில்லை.

    நானே சாட்சியம் துமே 

    துமேவின் கட்டுரையில் சில தகவல் பிழைகள் உள்ளன. தரவுகள் அடிப்படையிலான பிழைகளை விட்டுவிட்டு அவருடைய வாதத்திலும் அனுமானத்திலும் உள்ள குறைபாடுகளின் மீதும், அவரது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும் உள்முரண்பாடுகளின் மீதும் கவனம் செலுத்த விழைகிறேன்.

    ஓர் அடிப்படையும் வெளிப்படைத்தன்மையும் வேண்டும் என்பதற்காக நான் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறேன் – நான் 1916-ல் ஓர் அரசியல் சக்தியாக உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் நான்வது தலைமுறை உறுப்பினர், மற்றும் மூன்றாவது தலைமுறையாக மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. இந்த இயக்கத்தின் கொள்கைகளைத் தற்போது பின்பற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் நான். (இட ஒதுக்கீடுகள் முதலில் 1920-களில் சென்னை மாகாணத்தின் நீதிக்கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன. இது இரட்டையாட்சி முறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் (இந்தியர்களால்) மாண்டேக்-செல்ம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்களின் விளைவாக உருவாக்கப்பட்டது. ஆக, துமே சுட்டும் ‘சமூக அநீதி’யோடு நெருக்கமான பிணைப்பை நான் கொண்டிருக்கிறேன்.)

     

    பல நூற்றாண்டுகளாக நிலவுடைமையாளர்களாக இருந்த, பிராமணரல்லாத ஒரு மேல் சாதி குடும்பத்தில் நான் பிறந்தேன். தமிழ்ப் பிராமணர்களுக்கு இருக்கும் சாதி 

    அடிப்படையிலான அதே இட ஒதுக்கீடுதான் எனக்கும். நான் அமெரிக்காவில் 20 ஆண்டுகள் (1987 முதல் 2007 வரை) வாழ்ந்தேன், பட்டபடிப்புக்காக முதன்முதலில் சென்று, பின்னர் ஆலோசகராகவும் முதலீட்டு வங்கியிலும் தொழில்வாய்ப்பைப் பெற்றேன். சட்டமன்றத் தேர்தலின்போது நான் தாக்கல்செய்தவை உட்பட கூடுதல் விவரங்கள் மக்கள் பார்வைக்குப் பொதுவெளியில் உள்ளன.

    இந்த அடிப்படையில், மேற்கண்ட துமேவின் அடிப்படையற்ற வாதங்களை ஒவ்வொன்றாக நான் கருத்தில் கொள்கிறேன், நியாயமற்ற விளிம்புநிலையாக்கலுக்கு உட்படுத்தப்பட்டு அமெரிக்காவுக்குக் புலம்பெயர்ந்ததால் கமலா ஹாரிஸின் தாய் சியாமளா கோபாலன், இந்திரா நூயி மற்றும் சுந்தர் பிச்சை ஆகியோர் தமிழ்நாட்டுக்கும் (இந்தியாவுக்கும்) பெரும் இழப்பு எனும் வாதத்தை முதலில் எடுத்துக்கொள்கிறேன்.

    வாய்ப்புகளே தமிழ்ப் பிராமணர்களை நகர்த்தின

    பிராமணர்கள் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்ததற்காகக் கூறப்படும் ‘துரத்தல் காரணம்’ அற்பமானதாக இருக்கிறது. அமெரிக்காவுக்கு உலகெங்கிலுமிருந்து புலம்பெயர்வு நிகழ்கிறது. மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் நிலவும் பொதுவான கண்ணோட்டம் என்னவென்றால், இது பெரும்பான்மையாக ஒடுக்குமுறையின் காரணமாக அல்ல, வாய்ப்புகளின் அடிப்படையிலான புலம்பெயர்வே என்பதுதான்.

    அமெரிக்காவின் குடிவரவு சேர்க்கைக்கான முன்னுரிமைகளெல்லாம் பெருமளவில் அதிக திறன்-பங்களிப்பு-மதிப்பு கொண்டவர்களுக்கு சாதகமான வகையில் இருப்பதால் இந்தப் புலம்பெயர்வு சாத்தியமாகிறது. ஆனால், இந்தப் பொதுச் சட்டகத்துக்கு அப்பால், துபேவால் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று பேருமே பொதுவான ஒன்றைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் பட்டதாரி மாணவர்களாக அமெரிக்காவில் நுழைந்தனர் - நானும் அவர்களைப் போல மாணவனாகத்தான் அமெரிக்கா சென்றேன்.

     

    பல ஆண்டுகளாக நீடிக்கும் உண்மை என்னவென்றால், இன்று அமெரிக்காவில் உலகிலேயே சிறந்த பட்டதாரிக் கல்வி முறை உள்ளது (எண்ணிக்கை, தரத்தின் அடிப்படையில்). எனவே, இது உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்து வரும் ஆர்வமுள்ள மாணவர்களை அதிக அளவில் தன்வசம் ஈர்க்கிறது.

    குறைந்தது 19-ம் நூற்றாண்டிலிருந்து சிறந்த சர்வதேசக் கல்வியை நோக்கிச் செல்வதற்குத் தமிழ்நாட்டின் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு இருந்திருக்கிறது. நீதிக் கட்சியின் தலைவர்கள் பலர், பெரும்பாலும் பிராமணரல்லாத மேல்தட்டு வர்க்கத்தினர், அப்போதைய சிறந்த உயர் கல்வியிடமாக கருதப்பட்ட ஆக்ஸ்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களில் (ஆக்ஸ்ஃபோர்டிலும் கேம்பிரிட்ஜிலும்) கல்வி கற்றனர். நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான என் தாத்தா 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லண்டனில் உள்ள தி லேஸ் பள்ளி, இயேசு கல்லூரி (ஆக்ஸ்போர்டு) மற்றும் லண்டன் இன்னர் டெம்பிள் ஆகியவற்றில் கல்வி கற்கும் வசதியைப் பெற்றிருந்தார்.

    தமிழ்ப் பிராமணர்களின் வசதி வாய்ப்புகள்

    சுதந்திரத்துக்குப் பிறகு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் பெரும் முன்னேற்றம் இருந்தபோதிலும், இந்தியக் கல்விச் சூழல் என்பது அமெரிக்கக் கல்வி அமைப்புடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லை. தேவையுள்ள அனைவருக்கும் இடமளிக்கும் அளவுக்கு இந்தியக் கல்வி அமைப்பு இல்லை. இதன் விளைவாக மிகச் சிறந்த திறமைசாலிகள் மட்டுமே அமெரிக்காவுக்குப் பட்டப் படிப்பு படிப்பதற்குச் செல்ல முடிந்தது. எனவே, சியாமளா கோபாலன், இந்திரா நூயி, சுந்தர் பிச்சை மற்றும் பல தமிழ்ப் பிராமணர்களால் இத்தகைய விசாலமான லட்சியத்தை நோக்கிச் செல்ல முடிந்தது; பெரும்பான்மையினரால் அப்படிச் செல்ல முடியவில்லை, என்பதே தமிழ்ப் பிராமணர்கள் நியாயமற்ற முறையில் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்ற தவறான கோட்பாட்டைப் பொய்யாக்குகிறது.

     

    மேலும் இந்தக் கண்ணோட்டம் தவறானது என்பது இந்த தமிழ்ப் பிராமணர்கள் 3 பேரும் அமெரிக்காவுக்கு 35 வருட காலத்தில் - 3 தலைமுறைகளாகப் புலம்பெயர்ந்ததன் மூலம் தெரிகிறது. துமே கூறுவதுபோல், இட ஒதுக்கீடு (இது தொடங்கியது 1920-களில்), மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்தைய (1947) சோஷலிஸத்தினால் ஓரங்கட்டப்பட்டதன் விளைவாக இருந்திருந்தால், நிச்சயமாக அது தமிழ்ப் பிராமணர்கள் பட்டப் படிப்புக்காக அமெரிக்கா செல்வதற்கான  ஆரம்பப் புள்ளியான உயர்தரப் பள்ளிக் கல்வியும் மிகச் சிறப்பான இளங்கலைப் படிப்பும் கிடைக்காமல் செய்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.

    மேலும், அமெரிக்காவில் அதிக அளவு தமிழ்ப் பிராமணர்கள் இருக்கிறார்கள் என்ற அவர் கூற்றை (இது ஆதாரமற்றது என்றாலும் எனது தனிப்பட்ட அனுபவத்தில் உண்மை) நாம் எடுத்துக்கொண்டால், இவ்வளவு சிறிய சமூகத்திலிருந்து இவ்வளவு அதிகமானோரால் அமெரிக்காவுக்குச் செல்ல முடிந்திருக்கிறது என்பதே துமேயின் கூற்றை மேலும் பலவீனமாக்குகிறது.

    தமிழ்நாட்டுக்கு லாபமே, இழப்பு அல்ல

     

    மற்றொரு கருத்தைப் பொறுத்தவரை, மேலே குறிப்பிடப்பட்ட மூவரும் (பெயர் குறிப்பிடப்படாத மற்றவர்களும்) உண்மையில் தமிழ்நாட்டுக்கு இழப்பா? அப்படியானால், அவர்கள் தமிழ்நாட்டிலேயே இருந்திருந்தால் தற்போது அடைந்ததற்கு சமமான உயர் நிலையை இங்கே அடைந்திருப்பார்கள் என்பது உண்மையாக இருக்க வேண்டும். அதேபோல், அவர்கள் தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தால் அவர்களுக்குத் தமிழர்களிடையே இதே அளவிலான மதிப்பு கிடைத்திருக்காது / கிடைக்காது என்பதும் உண்மை. 

    அவர்கள் ஒதுக்கப்பட்டிருப்பார்களோ இல்லையோ… இங்கேயே தங்கியிருந்தால் அவர்களின் தற்போதைய அந்தஸ்துக்கு அருகில் எதையும் சாதித்திருக்க முடியாது. ஏனெனில் இங்கே கிடைக்கும் வாய்ப்பு அமெரிக்காவில் கிடைக்கும் வாய்ப்பில் ஒரு சிறு பகுதிதான். பெப்சிகோ, ஆல்பபெட் அளவிலான உலகளாவிய தொழில்கள் இங்கே இல்லை.

    நாம் இருக்கும் இடம் கொண்டிருக்கும் எல்லைகள் சார்ந்து முன்வைக்க தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒரு உதாரணம் உள்ளது. என் தந்தையின் அகால மறைவால், நான் இந்தியா திரும்பினேன்; என்னுடைய 42 வயதில் வங்கியிலிருந்து ‘பணி ஓய்வு’ பெற்றேன். சில வேறுபட்ட பொறுப்புகளுக்காக சென்னையில் இருந்தேன்.

    இருப்பினும், எனக்கு ஒரு நிர்வாக இயக்குநராகவும், 70 நாடுகளில் இயங்கும் உலகளாவிய வங்கியில் சில நிதிச் சந்தை தயாரிப்புகளின் பிரிவின் உலகளாவிய தலைவராகவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. குறிப்பிடத்தக்க அளவு சர்வதேசப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், சென்னையிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று கோரினேன்.

     

    ஒரே மகனாக இருப்பதால் கணவரை இழந்த என் தாயை விட்டுப் பிரிந்து வாழத் தயங்கினேன். எனது தாயாரும் வெளிநாட்டில் தங்குவதை விரும்பவில்லை. ஆனால், வங்கியின் தலைமை எனது சூழ்நிலைகளுக்கு ஆதரவாக இருந்தபோதிலும், உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் வந்த வங்கி விதிமுறைகள்படி நான் நேரடி ஒழுங்குமுறை மேற்பார்வையில் இருக்க வேண்டியிருந்தது, நான் ஒரு வளர்ந்த ஓஇசிடி நாட்டுக்கு (OECD) இடம்பெயர்ந்தால் மட்டுமே அந்தப் பணியை ஏற்க முடியும் என்ற நிலை 

    ஏற்பட்டது.

    எனவே துமே முன்வைக்கும் கருத்தை நான் முழுமையாக எதிர்க்கிறேன். மேலும், கமலா ஹாரிஸ், இந்திரா நூயி, சுந்தர் பிச்சை, மற்ற குறிப்பிடப்படாத உயர் சாதியினர் உள்ளிட்ட புலம்பெயர்ந்த அனைவரும் - இத்தகைய பெரிய உயரத்தை அடைந்திருப்பதற்குக் காரணம் எதுவென்றால் உலகின் மிகப் பெரியதும், பாரபட்சமற்றதும், திறமையை மட்டுமே மதிப்பிடுவதுமான சந்தைக்கு அவர்கள் புலம்பெயர்ந்துதான்.

    அவ்வாறு செய்ததால், அவர்கள் தங்கள் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பெரும் சேவையாற்றுவதற்கான நல்ல நிலையில் உள்ளனர். ஆகையால், அத்தகைய திறமைகளை நாம் இழக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்குத் திறன் கொண்டவர்களையும், அதனால் நமக்குப் பெரும் ஊக்கம் அளிப்பவர்களையும் நாம் பெற்றுள்ளோம்.

    ஆகவே, துமேவின் 2 கருத்துகளை மட்டும் இனி புள்ளிவிவரங்களைக் கொண்டு பொய்யென்று நிரூபிக்க வேண்டியிருக்கிறது - தமிழ்ப் பிராமணர்கள் தற்போது ஒடுக்கப்பட்டுள்ளனர், மற்றும் சோஷலிஸமும் அடையாள அரசியலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்கியுள்ளன என்ற இரண்டு கருத்துகள்தான் அவை.

    பிராமணர்கள் ஒடுக்கப்பட்டவர்களா? 

    துமேவின் முதல் கூற்று உண்மையல்ல என்பதற்கு சான்று: 3%-க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட (இதைத் துமேவே ஒப்புக்கொள்கிறார்) தமிழ்ப் பிராமணர்கள் இந்திய குடிமைப் பணி, சட்டத் தொழில் (நீதித் துறை உட்பட), பட்டய கணக்கியல் மற்றும் பல பிற உயர்நிலை தொழில்முறை துறைகளில் பெருமளவில் பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. (எடுத்துக்காட்டு - https://www.businessinsider.in/india/news/social-justice-data-shows-indiangovernment-doesnt-walk-the-talk-on-reservations/articleshow/74223976.cms). மற்றொரு எடுத்துக்காட்டாக, இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மையானோர் பிராமணர்களும் (அவர்கள் மட்டும் 40%) பிற உயர் சாதிகளைச் சேர்ந்தவர்களும்தான் என்பதைச் சுட்டிக்காட்டலாம்.

    மேலும், இன்று இந்தியாவில் மிகப் பெரியதும், மிகவும் மதிப்பிற்குரியதுமான தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றான (நமது மாநிலத்தின் முதல் 2 அல்லது 3 இடங்களுக்கும் இருப்பதுமான) டிவிஎஸ் நிறுவனம் டி.வி. சுந்தரம் ஐயங்காரால் நான்கு தலைமுறைகளுக்கு முன்பு நிறுவப்பட்டு, இன்னும் தனியாருக்குச் சொந்தமான குழுவாக அவர்களது பிராமண சந்ததியினரால் நிர்வகிக்கப்படுகிறது.

    சரியாகச் சொல்வதானால், இதுபோன்ற சமமற்ற விளைவுகள் பெரும்பாலான உயர் சாதியினருக்குப் பொருந்தும். ஒரு நூற்றாண்டு முழுவதும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இருந்தபோதிலும், அவை போதுமானதாக இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக சாதி அடிப்படையில் முற்பட்ட சாதியினர் அனுபவித்த பலன்களை (இதில் பிராமணர்கள் மட்டுமே கல்விக் கற்கும் உரிமையும் அடங்கும்) முழுவதும் ஒழித்துக்கட்ட தற்போதைய இடஒதுக்கீடு போதவில்லை என்பது 

    தெரிகிறது.

    தமிழகத்தின் மேன்மையான குறியீடுகள்

    துமேவின் ஈவிரக்கமற்ற, முற்றிலும் தவறான கருத்து என்னவென்றால் அடையாள அரசியல் காரணமாகத் தமிழகத்தில் மோசமான சமூக-பொருளாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன என்பதுதான். இதைவிட உண்மைக்குப் புறம்பானது எதுவும் இருக்க முடியாது.

    துமே அடையாள அரசியல் என்று சொல்வது நூற்றாண்டு பழமையானதும், சமூக நீதியைக் குறிக்கோளாகக் கொண்டதுமான நமது திராவிட இயக்க அரசியல் ஆகும். 1916-ல் நிறுவப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1920-ல் மெட்ராஸ் பிரசிடென்சி சட்டப்பேரவைக்கான தேர்தலின்போது அதன் பத்திரிகையின் பெயரான ‘நீதி’(ஜஸ்டிஸ்) என்பதிலிருந்து நீதிக் கட்சி என்று அரசியல் கட்சியாகப் பெயரிடப்பட்டது ஆகும். அடுத்தடுத்த நீதிக் கட்சி அரசாங்கங்கள் சட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் சமூக வழக்கங்களை ஆழமாக மாற்றியது- 1920 – 1926-ல் பெண்கள் சம உரிமைகளைப் பெற்று 

    மெட்ராஸ் மாகாணத்தில் வாக்களிக்கவும், போட்டியிடவும் உரிமையளித்தது, அனைவருக்கும் கல்வி (சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் கட்டாயத் தொடக்கக் கல்வி), ஏழைகளுக்கு ஊட்டச்சத்து ( மெட்ராஸ் கார்ப்பரேஷனில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசப் பள்ளி உணவு), மற்றும் உயர்நிலை வேலைகளுக்கான சமத்துவம் (ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகையின் விகிதத்தின் அடிப்படையில் அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு) போன்ற மாற்றங்களைச் செய்தது.

    1920 முதல் இந்த நூறு ஆண்டுகளில், சுமார் 30 ஆண்டுகளைத் தவிர திராவிட இயக்கக் கோட்பாடுகளை ஆதரிக்கும் கட்சிகள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள 30 ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பிற மாகாணங்களிலும் மாநிலங்களிலும் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைவிட திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு நெருக்கமாக இருந்தன (எ.கா. கோயில் நுழைவுக்கான உரிமைகளை உறுதி செய்வது, அனைவருக்கும் கல்வி என்ற கொள்கை, மாநிலம் முழுவதும் இலவசப் பள்ளி உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துதல்). (ஆதாரம்: ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், தேசிய சுகாதார அறிக்கைகள் 2019, 2020)

    திராவிட இயக்கக் கொள்கைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றியதன் காரணமாக ஒரு தனித்துவமான நிலைக்குத் தமிழ்நாடு (இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில்) வந்துள்ளது- இது திராவிட (தமிழ்நாடு) மாதிரி என்று அழைக்கப்படுகிறது. மேலே உள்ள அட்டவணையில் உள்ள புள்ளிவிவரங்கள் - தனிப்பட்ட விதத்திலும், மற்ற மாநிலங்களுடனும் இந்தியா முழுமைக்கும் ஒப்பிடும்போதும் - தமிழகத்தின் 

    தனித்துவமான மற்றும் சமத்துவமான முன்னேற்றத்துக்கான சான்றுகளாக உள்ளன.

    ஒப்பீட்டளவிலான இந்த முன்னேற்றத்தின் ஆகச் சிறந்த ஆதாரமாக, சென்னையில் 2018-ல் திமுக சார்பாக இந்தியாவின் 15-வது நிதி ஆணையத்தின் விசாரணையின்போது நான் அளித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகளைச் சொல்லலாம் (https://ptrmadurai.in/15-terms-of-reference).

    இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று அழைத்தாலும் அது மையப்படுத்தப்பட்டதாகவும் கூட்டாட்சி அல்லாத முறையாகவுமே இயங்குகிறது, அதாவது சீனாவைவிடவும் மையப்படுத்தப்பட்டதாக. இதன்மூலம் டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு நேரடி வரிகளில் பெரும்பாலானவற்றை வசூலிக்கிறது, பின்னர், அவற்றை மாநிலங்களுக்கு வழங்குமானால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையங்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி ஒதுக்குகிறது.

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கானது அதன் மக்கள்தொகை விகிதத்தைவிட அதிகமாக உள்ளது (இந்திய மக்கள்தொகையில் 6% என்ற விகிதத்தைவிட அதிகமாக). கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பங்களிப்பு பெரும்பாலும் அதிகரித்துவந்தும், மத்திய வரி வருவாய்ப் பங்கிலிருந்து இருந்து நமக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு 7%-க்கும் குறைந்து 4% -ஆக உள்ளது. எளிமையான சொல்வதென்றால், நாம் தொடர்ந்து ஒப்பீட்டளவில் பணக்கார மாநிலமாக வளர்ந்துவருகிறோம், மேலும் பெரிய மொத்த வரிக் கொடையாளர்களாகிவருகிறோம்.

    மேலும் ஒரு படி மேலே சென்று, சில குறியீட்டெண்களில், தமிழகம் OECD நாடுகள் அளவுக்கு முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் கூறுவேன்.

    உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஸ்காண்டிநேவிய நாடுகள்,  அமெரிக்காவின் ‘சிவப்பு மாநிலங்க’ளுடன் ஒப்பிடும்போது கலிஃபோர்னியா, நியூயார்க் மாநிலங்கள் போன்றவற்றில் சிறந்த மற்றும் சமத்துவமான முன்னேற்றத்துக்கு வழிவகுத்த அதே முற்போக்கு ஜனநாயகக் கோட்பாடுகளால், மற்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டுக்கும் சிறப்பான பயன்கள் கிடைத்துள்ளன.

     

    உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான தத்துவம் அல்லது ஆட்சி முறை என்று ஒன்று இல்லாத நிலையில், தற்போதுள்ள அனைத்து மாதிரிகளும் ஏதோ ஒரு வகையான குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன. திராவிட மாதிரியை மிகவும் தீவிரமாகப் பின்பற்றுபவன் நான் என்றாலும், அந்த மாதிரியில் பல பரிமாணங்களில் இன்னும் முன்னேற்றங்கள் தேவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் துமே சுட்டிக்காட்டும் குறைபாடுகளுடன் தரவுகள் பொருந்திப்போகவில்லை. அவரது அனுமானங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், ஆயிரம் ஆண்டுகளாக சாதிக் கட்டமைப்புகளில் பொதிந்துள்ள பாகுபாட்டைக் கொண்ட ஒரு மண்ணில் ஒரு நூற்றாண்டுக்குள் அதிவேகமான திராவிட மாதிரியின் சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தன்னிகரற்ற விளைவுகளை அடைந்துள்ளது என்பதைத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. 

    இது ஒன்றும் சாதாரண சாதனை இல்லை. எனவே, இதுகுறித்து துமே மட்டும் அல்லாது இப்படிப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், முழுமையாகக் கற்றுணர்ந்து, முறையான கொள்கைப் பாடங்களைப் புரிந்துகொண்டு பேசுவதே சிறந்தது!பின்குறிப்பு: முன்னதாக ஆங்கிலத்தில் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு எதிர்வினையாக எழுதப்பட்டு, பின்னர் ‘நியூஸ் மினிட்’ பத்திரிகையில் வெளியான கட்டுரையின் செழுமைப்படுத்தப்பட்ட தமிழ் வடிவம் இது. தமிழுக்கேற்ப கட்டுரையைக் கட்டுரையாளர் மேம்படுத்தியிருக்கிறார். இக்கட்டுரை தொடர்பான இரு தரப்புக் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. தரவுகளோடு எழுதப்படும் கட்டுரைகள் வெளியிடப்படும். ‘விவாதம்’ ஆக இது தொடரும். - ஆசிரியர்.

    Source: Arunchol

     Articles Year Wise: