பணவீக்கத்தை சமாளிக்க ரிசர்வ் வங்கி செய்யவேண்டிய காரியங்கள் நிறைய உள்ளது: தமிழ்நாடு நிதியமைச்சர்

Published Date: June 27, 2022

CATEGORY: GST

நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகுதியாக  உள்ள நிலையில், வருவாய் இழப்புக்கான இழப்பீடு வழங்கும் காலவரையை மேலும் நீட்டிப்பதற்கு எதிராக  மத்திய அரசு முடிவெடுத்தாலும், மாநிலத்தின் வருவாய் வீழ்ச்சியை மட்டுபடுத்தும் வகையில் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாகியுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

லைவ்மிண்டிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தியாகராஜன், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான கொள்கைத் தலையீடுகள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தனது மாநிலத்தில் அளிக்கப்படும் ஆதரவு குறித்தும் அவர் பேசினார்.

அந்த பேட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்…

இந்தியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த உங்கள் பார்வை என்ன? பொருளாதார வளர்ச்சி நிதியாண்டு 21-22 இல்  8.7% ஆகவும், நான்காவது காலாண்டில்  4.1% ஆகவும் இருப்பதை பார்க்கமுடிகிறது. பொருளாதாரம் உறுதியாக இருப்பதாகவும், தேக்கநிலை குறித்த அச்சம் தேவையில்லை என்றும் மத்திய அரசு கூறுகிறது. இக்கருத்தை ஏற்பீர்களா?

நானும் அவர்களின் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், ஆனால் இந்த புதிய அக்னிபாத் திட்டத்தால் மக்களின் வாழ்வில் ஏற்படும் பாதிப்பு, வேலையின்மை மற்றும் நாடு முழுவதும் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது, முந்தைய பிழைககளின் விளைவுகளை எண்ணி கவலைப்படுகிறேன்.

8.7% என்பது நல்ல வளர்ச்சியை குறிக்கும் எண் என்பதால் சூழலை பொருத்திப்பார்க்காவிடில்  இந்த கணக்கு தவறாக வழிநடத்தும், ஏனெனில் இந்த வளர்ச்சி என்பது கடந்த ஆண்டு நிலவிய எதிர்மறை வளர்ச்சியுடன் தொடர்புடையது.  இந்த அடிப்படியில் கணக்கிட்டால்  இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நிலையைக்கூட இன்னும் நாம் எட்டவில்லை. எனவே  என் கருத்துப்படி இது பெரிதாய் மகிழ்ச்சியடைய ஒன்றும் இல்லை..

வட்டி விகித உயர்வுகளுக்குப் பிறகும் பணவீக்கம் ரிசர்வ் வங்கி வரையறையான  4% - 6% க்கு மேல் தொடர்கிறது, மேலும் உலகில் உள்ள மற்ற மத்திய வங்கிகளைப் போலவே ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தற்போது மேற்கொள்ள வேண்டிய சரியான கொள்கை அளவிலான தலையீடு எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதே பணவியல் கொள்கையின் முதன்மையான பணியாகும், ஆனால் ரிசர்வ் வங்கியால் அதைச் செய்ய முடியவில்லை. ஏனெனில் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், ரூபாயின் மதிப்பைப் பாதுகாப்பதற்கும், அரசாங்கத்திற்கு ஈவுத்தொகையை வழங்குவதற்கும் தங்களைப் பொறுப்பாளிகளாகக் கருதி தங்களது நெறிகளை அவர்களே நீர்த்துப்போகச் செய்தனர்.

பணவீக்கத்தைக் குறைக்கக்கூடிய நிதிக் கொள்கைகள் மீது உங்களுக்கு அதிக கட்டுப்பாடு இல்லை. நிதிக் கொள்கைகள் பணவீக்கத்தை ஊக்குவிப்பதில் சிறந்தவை, பணவியல் கொள்கைகள் அதனை கட்டுப்படுத்துவதில் சிறந்தவை. அதனால்தான் ஒப்பீட்டளவில் சுதந்திரமான அமைப்புகளை வைத்திருக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது, சுதந்திரமாக செயல்பட வேண்டும். 

இந்திய அரசு தனது கடன் திறன் மற்றும் நாட்டின் முதலீட்டு தர மதிப்பீட்டின் வரம்புகளை ஏற்கனவே மீறி வருகிறது என்றாலும், நிதிக் கொள்கையை  இறுக்கமாக்க சாதகாமான சூழல்கள் இருந்தாலும் , நிதிக் கொள்கையை இறுக்கமாக்குவார்கள்  என நான் நினைக்கவில்லை,

இவ்வளவு வேலையின்மையும், அபாயாகரமான பொருளாதார சூழல் நிலவுகிற இந்த கட்டத்தில் நிதிச் செலவைக் குறைக்கும் மனம் எந்த அரசியல்வாதிக்கும் இருக்காது என்று  நினைக்கிறேன்.

எனவே,  உண்மையில் ரிசர்வ் வங்கியியையே மீண்டும் சுட்டிகாட்ட வேண்டியுள்ளது . ரிசர்வ் வங்கி இந்தச் சமன்பாட்டின் நிதி மற்றும் விரிவாக்கப் பகுதியாக மட்டும்  அரசாங்கம் செயல்பட அனுமதிக்க வேண்டும், அதன் மூலம் ரிசர்வ் வங்கி எப்போதும் செய்து கொண்டிருக்க வேண்டிய தனது முதன்மை பணிக்கே  திரும்பவேண்டும்,. இது சற்று தாமதமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் இதற்காக தொடர்ந்து முயல வேண்டும்.

ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு சாதமான சூழல் இருப்பதாகத் தெரிகிறது, அவை ஏற்கனவே ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கும் காலவரையறையை நீட்டிக்க வலியுறுத்தி வருகின்றன.

அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்த   உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

இழப்பீடு ஒரு முக்கிய பிரச்சினை. நான் ஏற்கனவே இதைப் பற்றி எழுதியுள்ளேன், மேலும் விரிவாகச் செல்ல விரும்பவில்லை. இதை நான் ஏற்கனவே பகிரங்கமாகச் சொல்லிவிட்டேன், மீண்டும் சொல்கிறேன்.

இழப்பீடு வழங்குவதை  முற்றிலுமாக நிறுத்தும்  பட்சத்தில் அது சில மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை மத்திய அரசின் மனசாட்சி ஏற்றுகொள்ளும் என நான் நினைக்கவில்லை.

தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்திற்கு, நாங்கள் இரண்டு வழிகளில் தற்காத்துக் கொண்டோம். பயன்படுத்தப்படாத நிதிகளை கண்டடையும் முயற்சியின்போது நிதி சீர்திருத்த திட்டத்தை தொடங்கினேன். அம்முயற்சியில் நாங்கள் பணத்தைக் கண்டுபிடித்தோம், இதுவரை, அதனை பேலன்ஸ் ஷீட் கணக்குகளுக்குள் கொண்டுவரவில்லை. முதல்வர் சார்பாக சில  பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளேன் ஆனால் பல மாநிலங்களில் அத்தகைய பாதுகாப்பு வளையம் இல்லை. எனவே இழப்பீடு வழங்குவதை நிறுத்தினால் அம்மாநிலங்களுக்கு அது  மிகவும் கடினமான பிரச்சினையாக இருக்கும்.

ஜிஎஸ்டி செயல்திறனுடன் இயங்கவில்லை. வடிவமைப்பையும், நடைமுறையாக்கத்தையும் கூட விட்டுவிடலாம்  கவுன்சில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டுமல்லவா?  அது நடக்கிறதா என்றால் இல்லை.

இந்த ஜிஎஸ்டி அமைப்பின்  தினசரி நிர்வாக செயல்பாடுகள்  எந்த ஒரு நிறுவன தரநிலைகளின்படியும் நிபுணத்துவம் வாய்ந்ததில்லை. நாடு முழுமைக்கும்  மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக ஜிஎஸ்டி இருக்கும்போது, ஜிஎஸ்டி கவுன்சில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு ஒருமுறை கூடுவதைக்கூட உறுதிப்படுத்த முடியவில்லை  என்றால், ஒன்றிய அரசாங்கத்தின் முன்னுரிமைதான்  என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 26 பில்லியன் டாலர்களை ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இது இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 6.4% லிருந்து 6.8% ஆக அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும்  மாநிலங்கள் இழப்பீட்டுத் தொகை வழங்கும் கால வரையறையை நீட்டிக்கவேண்டுமென வைக்கும் கோரிக்கை, பெருந்தொற்று ஏற்படுத்திய சரிவிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை ,ஈளும் மோசமாக்கும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?

மாநிலங்கள் தாங்கள்  செய்ய வேண்டியதைச் செய்யாமல் ஒன்றிய அரசின்மீது  மேலும் சுமையை ஏற்றினால் , அது பெரும் பிரச்சனையாக உருவாகும்  என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உங்களுக்குத் தெரியும், இந்த இழப்பீட்டிற்கான நிதியில் பெரும்பகுதி அல்லது முழுவதுமே ஜிஎஸ்டி செஸ் மூலமாகவே திரட்டப்படுகிறது.

நான் ஒன்றிய  நிதியமைச்சரின் இடத்தில இருந்தால், இரண்டு காரணங்களுக்காக குறுகிய கால அளவிலான நீட்டிப்பைப் பரிசீலிப்பேன் - அதில் ஒன்று  ஜிஎஸ்டி வருவாயில் நாம் பெரும் ஏற்றதைப் பெற வேண்டும், இரண்டாவதாக நிகழ்வுகள் சரியானமுறையில்  நடந்தால், முந்தைய பணவீக்கத்தின் தாக்கம் குறைவது மாநிலங்களுக்கு உதவக்கூடும்.

அடிப்படை வரையறையை மாற்றி அமைப்பதன் மூலம் நீங்கள் சூத்திரத்தை சிறிது மாற்றலாம் மற்றும் புதிய கணக்கை கொடுக்கலாம். சில மாநிலங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் ஆனால் தமிழ்நாட்டை பொறுத்த வரையில் இது சரியானதல்ல, என்றாலும் நாங்கள்  முன்னரே திட்டமிட்டு சில முன் ஏற்பாடுகளை செய்ததால் அந்த நிலையை சமாளிக்க முடியும்.

மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் ஜிஎஸ்டி விவகாரத்தில்  மட்டும் இல்லை. நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை மற்றும்  தேசிய பணமாக்க திட்டங்களிலும் இருப்பதை கடந்த காலங்களில் பார்த்தோம். கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை கடைபிடிக்குமாறு மாநிலங்களை பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கும் சூழலில், ஒன்றிய அரசு தங்களிடம் இருந்து ஏராளமான அதிகாரத்தை பறித்துவிட்டதாக  மாநிலங்கள் குற்றம் சாட்டுகின்றன.

இது உண்மையில் பொருளாதாராம் சார்ந்த பிரச்சனை என்பதை விட அரசியல் பிரச்சினையாக தோன்றவில்லையா?

இந்த வகையான நினைவாற்றல் இல்லாத விவாதத்தில் நான் ஈடுபட விரும்பவில்லை. 13 ஆண்டுகள் குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான்  சுதந்திர இந்தியாவில்  மாநிலங்களின் உரிமைகளை தீவிரமாக வலியுறுத்தியவர். அவர் என்னை விட சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமைக் குறித்து மிகவும் கடுமையாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தார்.

பதவி மாறியதும் அவரது நிலைப்பாடு மாறியது,  பிரதமாரன உடனே மாநிலங்களுக்கு உரிமைகள் இருப்பதையே அவர் மறந்துவிட்டார்.

எங்களின் நிலைப்பாடு நிலையானது மற்றும் நாங்கள் எதைக் கேட்டாலும் அதற்கான நியாயம் அரசியலமைப்பில் பொதிந்துள்ளது.

நீங்கள் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறீர்கள், முதல்வரும் மேற்கொள்கிறார். தமிழ்நாடு அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தை  முதலீட்டுகளுக்கான தலைநகராக மாற்ற ஸ்டாலின் அவர்களின் அரசு என்ன செய்கிறது?

இந்த நிதியாண்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் நாங்களே முதலிடத்தில் இருக்கிறோமென  நினைக்கிறேன், ஆனால் எப்படியிருந்தாலும், நாங்கள் வேகமாக வளர்ந்து வருகிறோம். ஆண்டுக்கு ஆண்டு 40% வளர்ச்சியைக் காண்கிறோம். உலகப் பொருளாதாரத்தில் தற்போது இந்தியாவை நோக்கி ஒரு பெரிய நகர்வு உள்ளது. இந்த அலையில்  தமிழகம் தனது இயற்கையான சாதக அமசங்களுடன் பயணம் செய்கிறது.

மனிதவள வளர்ச்சிக் குறியீடு, சமூக வளர்ச்சிக் குறியீடு, குறைந்த ஏற்றத்தாழ்வு( கினி கோயபிசியன்ட்) மற்றும் அதிக நுகர்வுத் திறன் கொண்ட 80 மில்லியன் மதிப்பிலான சந்தை ஆகியவற்றோடு  நீங்கள் குறிப்பிட்டுள்ள அம்சங்களுடன் தமிழ்நாடு  மற்ற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் மிகுதியான சாதமான அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்தோடு எங்களிடம் மிகநீண்ட கடற்கரை உள்ளிட்ட புவியியல் சாந்த சாதக அம்சங்களுடன் , பல விமான நிலையங்கள் மற்றும் பல நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது.

அடிப்படையான விஷயங்களைச் சரியாகச் செய்வதே பொதுக் கொள்கையில் முக்கியமான பாடம். அவையே எங்களுக்கு பல தசாப்தங்களாக நிலையான நன்மைகள் பயப்பவையாக உள்ளது.

இது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான உலகம், ஆர்வமுள்ள இளம் தொழில்முனைவோரை வளர்த்தெடுப்பதற்கு மாநில அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறது?

நாங்கள் பல முன்னெடுப்புகளை  செய்கிறோம், ஆனால்  சிலவற்றை மற்றும் முன்னிலைப்படுத்தி குறிப்பிடுகிறேன். Tamil Nadu Seed Investment Corporation என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளோம், அதற்கு ஓர் முன்னாள் துணிகர முதலீட்டாலரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளோம், மேலும் அரசாங்கமே ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்து, பகிரப்பட்ட சேவைகள், வழிகாட்டுதல், நிதியளிப்பவர்களுக்கான இணைப்பு போன்றவற்றை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கும்.

இரண்டாவதாக, தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகத்தின் கீழ், ஸ்டார்ட்-அப்களில் மேலும் நூறு கோடி முதலீடு செய்யவுள்ளோம்.மிகவும் புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி, சேவைகளை வழங்குகின்ற பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றின் மூலம் தமிழக அரசுகூட பயன்பெற முடியும்.

கடந்த நவம்பரில், நான் ஒரு நிகழ்ச்சியையில் பங்கேற்ற பிறகு  முதல்வரிடம் எனது கருத்தைத் தெரிவித்தேன், அதாவது சாலை தொழில்நுட்பம், தானியங்கி சமையல், ரோபாட்டிக்ஸ் மற்றும் நிதி தொழில்நுட்பம்  ஆகியவற்றில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று. இது ஒரு பெரிய வெற்றி என்று நாங்கள் நம்புகிறோம்.

ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிப்பதற்காகவும், நேரடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளவும்  எங்கள் டெண்டர் விதிகளை திருத்தினோம். தமிழ்நாடு அரசே மிகப்  பெரிய கொள்முதலாளராக உள்ளது , ஏனெனில் எங்களது ஆண்டு பட்ஜெட் 50 பில்லியன் டாலர்கள். எனவே, இதுபோன்ற ஸ்டார்ட் அப்களை அரசு  எப்போதும் ஊக்குவிக்கலாம்.

இந்தியாவின் பொருளாதார நிலை  இலங்கையைப் போன்றே இருக்கிறது என சில வாரங்களுக்கு முன்பு ராகுல் காந்தி ட்விட்டரில் சில தரவுகளை வெளியிட்திருந்தார்.

காங்கிரஸ் உங்கள் கட்சிக்கு மிகவும் வலுவான கூட்டணியாக  உள்ளது, எனவே அவரது இந்த கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?

ஆம் , இல்லை என்று இரண்டையும் இதற்கு விடையாக கூறுவேன். ஜனநாயக நடைமுறை இல்லாமல், கட்டுபாடுகள் மற்றும் சமன்பாடுகள் இல்லாமல் அதிகாராம் குவிக்கப்படும்போது , அது தவறான பாதைக்கே இட்டுச்செல்லும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இலங்கையின் அளவு மற்றும் அது பொருளாதாரத்தின் வகையைக் கருத்தில் கொண்டால், இலங்கையில் ஏற்ப்பட்டுள நெருக்கடியின்  மிக வலுவானது, ஆனால் அத்தகைய  அசாதாரண சரிவை எதிர்கொள்ளும் அபாயத்தில் நாங்கள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

சமீப காலமாக நமது அரசியல்வாதிகளிடம் இருந்து பல்வேறு அரசியல் மற்றும் வளர்ச்சி மாதிரிகள் பற்றி நிறைய கேள்விப்பட்டு வருகிறோம்.

உங்கள் மாநிலம் வெற்றி பெற்றுள்ளதாக நீங்கள் முன்வைக்கும் திராவிட மாடல் என்றால் என்ன?

திராவிட மாடல் என்பதுன்  மிகவும் எளிமையானது. அது முதலில் சுயமரியாதையுடன் தொடங்குகிறது. யாரும் புறக்கணிக்கப்படாமல் அனைவருக்கும் வெற்றிபெற சமமான வாய்ப்பை இந்த மாடல் வழங்குகிறது. அனைவருக்கும் கல்வி மற்றும் இடஒதுக்கீடு மூலம் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் பல நூற்றாண்டுகால  ஒடுக்குமுறையை ஈடுசெய்யத்தக்க அளவிற்கு வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதே அடிப்படையாகும்.

திராவிட  மாடல்  சுயாட்சியில்  அதிக கவனம் செலுத்துகிறது மற்றும் ஒன்றியத்திலிருந்து மாநிலத்திற்கு அங்கிருந்து  மாவட்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கிறது. கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் எப்போதும் முன்னேறி மேலே செல்லும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கிறது.

எனது டிரைவரின் மகனும், சிறப்பு வசதிகள் பெற்றுள்ள என் மகன் படிக்கும் அதே பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டால் அது நான் வெற்றிகரமான விளைவை உண்டாக்கிவிட்டேன்  என்பதை குறிக்கும்.

 

Media: Live Mint