/

2020-21ம் நிதியாண்டிற்கு திருத்தம் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை வேண்டுமென தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்த கோரிக்கை குறித்த அறிக்கை

Published Date: June 2, 2020

நேற்று (01.06.2020) ஹிந்து ஆங்கில நாளிதழில் “புதிய நிதிநிலை அறிக்கை தேவையில்லை, அமைச்சர்கள் செலவினங்களை மறு ஆய்வு செய்து வருகிறார்கள்” என்று பொருள்படும் தலைப்புடன் வெளியான கட்டுரை மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. அதில் “ஏற்கனவே இருக்கும் கட்டமைப்பிற்குள் தேவையானவற்றை செய்ய முடியும் என்று கூறுகிறார் பாண்டியராஜன்” என்ற வாசகம் முத்தாய்ப்பாக அமைந்தது. இந்த கட்டுரையை எழுதியவர் திரு T. ராமகிருஷ்ணன் (சென்னை). இந்தக் கட்டுரை குறித்து விவரம் தெரியாதவர்களுக்கு, அந்த கட்டுரையில் கூறப்படும் பாண்டிராஜன் என்பவர் தமிழக அமைச்சர் திரு மா.பா பாண்டியராஜன் அவர்கள் என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

முதலில், நெடிய பாரம்பரியமும், பல திறமையான ஆசிரியர்களை கடந்தகாலங்களில் கொண்டிருந்த ஹிந்து போன்ற ஒரு மரியாதைக்குரிய நாளிதழ், வெளிப்படையாக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட ஓர் கட்டுரையை விவாததிற்கு உட்பட்ட விஷயமாக கருதி வெளியிட்டது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்திய அரசியலமைப்பு சட்டம், துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு (நான்கு தளங்களில் வகைபடுத்தபட்டுள்ள) உட்பட அரசாங்க செலவினங்கள் சார்ந்த அனைத்து அதிகாரங்களையும் சட்டப்பேரவைக்கு தான் அளித்துள்ளதே தவிர, நிர்வாகத்திற்கு (அமைச்சர்களுக்கு) அல்ல. அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, அவரவர் துறையினால் சட்டப் பேரவையில் சமர்பிக்கப்பட்ட விரிவான மானிய கோரிக்கைகளை, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற பின்னர் முழுமையாக செயல்படுத்த வேண்டியது ஒவ்வொரு அமைச்சரின் கடமை.

நிதிநிலை அறிக்கையும் மானியக்கோரிக்கையும் (வெளித்தோற்ற அளவிலாவது) இந்த அரசாங்கத்தினால் மிகவும் முக்கியமாக அங்கீகரிக்கப்படுகிறது. பதினைந்தாவது சட்டப்பேரவை தொடங்கிய நாள் முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக சட்டப்பேரவை கூட்டப்பட்ட காலங்களில் ஆண்டுதோறும் 35 நாட்களில் ஏறத்தாழ 30 நாட்கள், அல்லது 86% நேரம் இந்த இரு காரணங்களுக்காக மட்டுமே சட்டபேரவையில் செலவிடப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும் ஒரு ரூபாய் கூட அதிகமாக செலவு செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை குறைத்து செலவு செய்வது (சேமிப்பது) திட்டத்தின், துறை/அமைச்சரின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இதுபோன்ற தோல்விகள், விதி மீறல்கள் என்ற அளவில் அரசின் நிதிநிலை மீது CAG (மத்திய தணிக்கை குழு) அலுவலகம் மேற்கொள்ளும் வருடாந்திர ஆய்வு முடிவுகளில்  தெரிவிக்கப்பட்டும் உள்ளது.

ஒரு அமைச்சரின் துறைக்கு கீழ் வரும் எந்த ஒரு திட்டம்/தலைப்பில் நிர்ணயித்த தொகையை விட குறைவாக செலவு செய்வதென்பது, குறைந்தது மூன்று வகைகளில் தோல்வியாக கருதப்படுகிறது:

a.    மக்களின் விருப்பத்தை (சட்டப்பேரவையின் ஒப்புதல் மூலம் தெரிவிக்கப்பட்ட) பூர்த்தி செய்வதில் தோல்வி. உதாரணமாக, ஒரு சாலை அமைக்கப்படவில்லை அல்லது கல்வி ஊக்கத்தொகை அளிக்கப்படவில்லை.

b.    இந்தத் திட்டத்தின் பயனாளிகள் உரிய பலனை அடையாமல் அநீதிக்கு உள்ளாக்கப்படுவது. அதவாது, துறையின் போதிய செயல்பாட்டு திறன் இல்லாத காரணத்தால் நியாயமாக ஒரு பயனாளிக்கு கிடைக்கவேண்டிய திட்டம், சட்டபேரவை மூலமாக மக்களுக்கு சென்றடைய வேண்டிய பலன், இல்லாமல் போவது.

c.    தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவு செய்து திட்டங்களை செயல்படுத்திய மற்ற துறைகளுக்கு, அதிக நிதி கிடைத்திருக்க கூடிய வாய்ப்பு இல்லாமல் செய்யப்படுவது. அதாவது உபயோகிக்க முடியாமல் சேமிப்பாக மாறிய நிதியை மற்ற துறைகளுக்கு சட்டப்பேரவை மூலமாக ஒதுக்கீடு செய்திருக்க முடியும், அதன் மூலமாக மக்கள் பயன் அடைந்திருப்பார்கள்.

நான் ஏற்கனவே கூறியதைப் போல சட்டப்பேரவையின் பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் (நான் உட்பட), இது போன்ற பல குறைத்து செலவிட்ட திட்டங்களின் மீது ஆய்வு மேற்கொண்டுள்ளோம். கட்சி வேறுபாடின்றி, அனைத்து உறுப்பினர்களும், எந்த அரசாங்கமாக இருந்தாலும்  (அதிமுக/திமுக) இது போன்ற  முழுமையாக செலவு செய்து செயல்படுத்தப்படாத திட்டங்கள் மீது வேதனை கொண்டிருக்கிறோம். அது குறித்து துறைசார்ந்த அதிகாரிகளிடம் அவர்களுடைய கடமைகள், அவர்களின் தோல்விகள், மக்கள் விருப்பம் ஆகியவை குறித்து எடுத்துரைத்து இருக்கிறோம். சில சமயங்களில் தொடர்ந்து முழுமையாக செலவு செய்யாமல் இருக்கும் துறைகளை மிகவும் கடுமையாக கண்டித்தும் இருக்கிறோம்.

எனவே நிதர்சனம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டுமே தவிர,  சட்டப்பேரவையின் ஒப்புதல் பெற்ற துறையின் மானியங்கள், திட்டங்கள் மீது எந்த ஒரு தனி அமைச்சரும்,  அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செலவோ அல்லது சேமிப்போ (செலவுகளை குறைத்தல்) செய்துவிட முடியாது.

அமைச்சர் திரு பாண்டியராஜன் அவர்கள் முன்வைத்துள்ள இந்த திட்டமானது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல (ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக செயல்படும் நீதித்துறை இருக்கும் பட்சத்தில் மிகக்கடுமையான புகார்), மிகவும் அபத்தமானது, முட்டாள்தனமானது. 

திரு பாண்டியராஜன் அவர்கள் முன்வைக்கும் திட்டத்தின் ஆழமான தோல்விகளை பின்வரும் கேள்விகள் மூலமாக புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

1.    மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேரிடர் காரணமாக வருவாய் 35000 கோடி ருபாய் அளவுக்கு சரியும் (அதாவது நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்ட 1,50,000 கோடி ரூபாயில் 23%) என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். உங்கள் இல்லங்கள் அல்லது நிறுவனங்கள், முதலாளிகளை ஒரு நிமிடம் எண்ணிக் கொள்ளுங்கள். உங்களுடைய வருமானம் இந்த ஆண்டு திடீரென்று 25%  குறைக்கப்படும் எனும் பட்சத்தில் உங்களுடைய செலவு திட்டத்தை நீங்கள்  மாற்றி கொள்வீர்களா/இல்லையா? உறுதியாக செய்வீர்கள். அதே போல், தெளிவான சிந்தனையுடைய அரசாங்கம் நிச்சயமாக அதன் செலவினங்கள் குறித்து மறு ஆய்வு செய்து, எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும். அதன் பொருட்டு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்ட துறைகளுக்கு நிதியை குறைக்கவோ அல்லது அந்த செலவை முற்றிலுமாக தவிர்த்து எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமோ அதற்கு நிதியை அதிகரிக்கவோ வேண்டும். இதுபோன்ற மாற்றங்களுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதல் தேவை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டு சட்டபேரவையின் ஒப்புதல் பெற்ற மானியங்களில் “எதை குறைக்கலாம், எதை அதிகரிக்கலாம்” என்ற உரிமையை திரு.பாண்டியராஜன் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தை தாண்டி யார் அல்லது எது வழங்குகிறது? இதுபோன்ற அரசியலமைப்பு  சட்டத்தைத் தாண்டிய அதிகாரத்தை நேரடியாக இறைவனிடம் இருந்து அவர் பெறுகிறாரா?

2.    திரு பாண்டியராஜன் மட்டுமல்ல ஒட்டுமொத்த அதிமுக அமைச்சரவையும் இதுபோன்ற அரசியலமைப்பு சட்டத்தைத் தாண்டிய அதிகாரத்தை இறைவனிடம் இருந்து பெற்றுள்ளனர் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியே இருந்தாலும் அவர்களால் உரிய செலவினங்களை 25% வரை அனைத்து துறைகளுக்கும் சமமாக குறைத்துவிட முடியாது. ஒப்புதல் பெற்ற நிதிநிலை அறிக்கை மானியக் கோரிக்கைகள் ஆகியவை 54 துறைகளைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு விதங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த செலவினங்களை குறைப்பது குறைந்தபட்சம் மூன்று விஷயங்களுக்காக சிக்கல்கள் நிறைந்தது:

a.    விருப்பத்திற்கு உட்பட்ட செலவுகள் (முதலீடுகள், திட்டங்கள்), கட்டாய செலவுகள் (ஊதியம், ஓய்வூதியம் போன்றவை) ஆகிய இரண்டுக்கும் இடையே துறைக்கு துறை மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளது. கட்டாய செலவுகளை (உதாரணமாக ஊதியம், ஓய்வுதியம்) தவிர்க்க முடியாது. அவை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை. எனவே அவற்றைப் பூர்த்தி செய்தே ஆகவேண்டும். எனவே அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருந்தாலும் (இல்லை என்பதே நிதர்சனம்) தவிர்க்க முடியாத செலவுகள் அல்லது கட்டாய செலவுகள் சார்ந்த துறைகளின் செலவினங்களை (உதாரணமாக  25% வரை) நிச்சயமாக குறைக்க முடியாது.

b.    முதலீட்டு செலவினங்களுக்கும், வருவாய் செலவினங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதிகளுக்கு இடையேயான வேறுபாடுகளும் துறைவாரியாக மிகப் பெரியது. உதாரணமாக பொதுப்பணித்துறை மிகப்பெரிய அளவிற்கு முதலீட்டு செலவினங்களை செய்துவருகிறது (ஏறத்தாழ 90% புதிய சாலைகள், கட்டிடங்கள் போன்றவற்றில்) - இதுபோன்ற ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இவற்றை நிச்சியம் குறைக்க வேண்டும். ஆனால் அதே சமயம், ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகியவற்றின் செலவுகள், மொத்த மானியத்தில் மிகப்பெரிய அளவில் வருவாய் செலவினகளாக, (ஏறத்தாழ 90% மாதாந்திர ஊக்க தொகை, அவர்களுடைய விடுதி செலவுகள் போன்றவை) உள்ளது. மனித நேயமும் பொறுப்புடன் செயல்படும் மூளையும் உள்ள எவரும் இதுபோன்ற பேரிடர் நேரத்தில் இந்த செலவுகளை குறைக்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். உண்மையில் இவை குறைக்கபடவே கூடாது. இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் அதிகரிக்கப்பட வேண்டும்.

c.    மானிய ஒதுக்கீடுகள் துறைகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் வேறுபடும். உதாரணமாக பொதுப்பணித்துறைக்கு (நெடுஞ்சாலை மற்றும் கட்டிடம்) சுமார் 15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு சுமார் 1000 கோடி, இந்து அறநிலையத் துறைக்கு சுமார் 220 கோடி. ஏன் இவற்றையெல்லாம் சீராக 25% குறைக்க வேண்டும்? கோவில்களிடம் இருந்து 50 கோடி ரூபாயும், பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்திடம் இருந்து 200 கோடி ரூபாயும் குறைக்க வேண்டும் என்று திரு பாண்டியராஜன் அவர்கள் எண்ணுகிறாரா? அதற்கு பதிலாக பொதுப்பணித் துறையிடம் இருந்து கூடுதலாக 1.67% என்ற அளவில் குறைத்தால் அதே 250 கோடி ரூபாய் நிதியை பெறமுடியுமே? திரு பாண்டியராஜன் இந்துக்களுக்கு எதிரானவரா? அல்லது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரானவரா?

இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்துக்கொண்டால் “அனைத்து துறைகளின் செலவுகளையும் சீராக 25% வரை குறைப்பது” என்பது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல முட்டாள்தனமான செயல்பாடும் கூட. இது “ஒரே தேசம், ஒரே மொழி” போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒப்பானது.

திரு பாண்டியராஜன் அவர்களின் இந்த திட்டமானது ஏன் அடிப்படையில் பிழைகள் நிறைந்தது என கீழ்காணும் காரணங்கள் உட்பட கூடுதலாக பல காரணங்களை முன்வைக்க முடியும்

a)    இதுபோன்ற சூழ்நிலையில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் செயல்பாடுகள்

b)    நிதியை செலவு செய்வதில் துறைகளுக்கு இடையே காலஅளவில் உள்ள வேறுபாடுகள்

c)    அமைச்சர்களால் முடிவு செய்யப்பட்டு, குறைக்கப்பட்ட அதிகாரபூர்வமற்ற (அரசியலமைப்பு சட்டத்தின் படி) வரம்புகளை மீறி, ஆனால் சட்டப்பேரவை ஒப்புதல் பெற்ற (அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட) வரம்புகளுக்குள் செலவு செய்பவர்களை, ஒழுங்குபடுத்துவதிலும், சட்டத்தின் முன் நிறுத்துவதிலும் இயலாமை.

ஆகவே, இது முற்றிலுமாக சட்டவிரோதமானது மட்டுமல்ல கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள திரு பாண்டியராஜன் அவர்களின் கருத்துக்கள் சிந்தனையற்றவை என்றும் நிரூபிக்கும். ஆனால், செத்த பாம்பை அடிப்பதை விட கடைசியாக ஒப்பீட்டளவில் ஒரு செய்தியை முன் வைக்கிறேன்.

கர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் டி கே சிவகுமார் (காங்கிரஸ்) அவர்கள் முதலமைச்சர் திரு எடியூரப்பா (பாஜக) அவர்களிடம்,  இக்கட்டான சூழ்நிலையையும், வருவாய் எதிர்பார்ப்புகளில் ஏற்படப்போகும் கணிசமான மாற்றங்களையும் கருத்தில் கொண்டு, சட்டமன்றத்தை கூட்டி திருத்தம் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்று திரு எடியூரப்பா அதை செய்யலாம் என்றும் கூறியுள்ளார். அரசியல் காரணங்களுக்காக, எங்கள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்களை இந்த விவரமற்ற கட்டுரையின் மூலமாக குற்றம் சாட்டுவதை போலவே, திரு எடியூரப்பாவையும் “மக்களின் நேரத்தை தேவையில்லாமல் வீணடிக்கிறார்” என்று திரு பாண்டியராஜன் அவர்கள் விமர்சிப்பாரா?

அறைகுறை அறிவுள்ள அமைச்சர்களும், பத்திரிகையாளர்களும் தொலைநோக்குத் பார்வையும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு தலைவர் மீது இதுபோன்ற குற்றம் சுமத்துவது வேடிக்கையையும் தாண்டியதாக உள்ளது. எனினும், திரு மா.பா  பாண்டியராஜன் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் குறித்து போதுமான விவரம் தெரியவில்லை என்பது எனக்கு உண்மையில் மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கவில்லை.

முக்கிய கேள்வி என்னவென்றால், அரசாங்கத்தை வழிநடத்தி வரும் முதல்வரும், நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் துணை முதல்வரும், பத்து ஆண்டுகளுக்கும் மேல் நிதித்துறை செயலாளராக பணியாற்றிய முதன்மை செயலாளரும், தற்போதைய நிதி செயலாளரும் இதேபோன்ற கருத்தின் அடிப்படையில்தான் செயல்படுகிறார்களா - இந்த அரசுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறாமல் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் செலவினங்களை ஏற்றவோ/இறக்கவோ உள்ளபடியே அதிகாரம் உள்ளது என்று நம்புகிறார்களா?

அவர்களின் பதில்களை எதிர்நோக்கி இருக்கிறேன், அவை இந்த சந்தேகங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதாக அமையும்.

 Articles Year Wise: